சேலத்தில் ஸ்டாலின் முன்பு அடித்துக் கொண்ட திமுகவினர்
ஏற்காடு இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தல் அறிமுகக் கூட்டம் சேலம் மாவட்டம் வலசையூரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து அங்கிருந்து கூட்டத்திற்கு கிளம்பிச் சென்றார்.
அவரை வரவேற்க 14வது வார்டில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது அங்கு ராஜே்ந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர். ஸ்டாலினை வரவேற்பதில் இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஸ்டாலின் முன்பே அடித்துக் கொண்டனர். அப்போது திமுக மண்டல முன்னாள் தலைவர் நடேசன் தாக்கப்பட்டார். இதை பார்த்த ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து இந்த சம்பவத்தை கண்டித்து ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இரு தரப்பினரும் தாக்குதல் சம்பவம் குறித்து புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றனர்.
தேர்தல் நேரத்தில் கட்சியினர் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.