ஆலங்குடி, அணைக்கட்டு தொகுதிகளின் வேட்பாளர்களை மாற்றுங்கள்- திமுகவில் வலுக்கும் போராட்டம்
சென்னை: திமுகவில் ஆலங்குடி, அணைக்கட்டு தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை மாற்றக்கோரி அதிருப்தியாளர்கள் சிலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மே 16ம் தேதி தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 25 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 4 மாநகர செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதேபோல முன்னாள் அமைச்சர்கள் 25 பேரில் 17 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, பொங்கலூர் பழனிச்சாமி, என்.செல்வராஜ், உபயதுல்லா, தமிழரசி, கே.ராமச்சந்திரன், சுப.தங்கவேலன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த சட்டசபைத் தேர்தலில் புதுமுகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
அணைக்கட்டு வேட்பாளருக்கு எதிர்ப்பு
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நந்தகுமாரை மாற்ற கோரி அணைக்கட்டு பகுதி திமுக செயலாளர் பாபுவின் தலைமையில் பல திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தையும் சேதப்படுத்தினர்.
விருப்பமனு கொடுத்த பாபு
அணைக்கட்டு தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் மு.பாபு கட்சியில் வாய்ப்புக் கேட்டு விருப்ப மனு செய்திருந்தார். பாபு தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அணைக்கட்டு பகுதி திமுகவினர் பெரிதும் எதிர்பார்த்தனர்.
நந்தகுமாருக்கு எதிர்ப்பு
இந்நிலையில், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்த குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த பாபுவின் ஆதரவாளர்கள் அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதரவாளர்களில் சிலர், அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சக்கரத்தின் முன் படுத்து போராட்டம் நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அங்கு சென்ற ஒன்றிய செயலாளர் பாபு, மறியலைக் கைவிடும்படி கூறியும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அணைக்கட்டு போலீசாரும், வருவாய்த் துறையினரும் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆலங்குடி வேட்பாளர்
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி திமுக வேட்பாளருக்கும் இப்பகுதி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆலங்குடி திமுக வேட்பாளர் கட்சிக்கு புதியவர் என்று அப்பகுதி திமுகவினர் கருத்து தெரிவித்தனர்.
ஆதரவாளர்கள் எதிர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அறந்தாங்கி ஒ.செ வும் ஒன்றிய சேர்மனுமான சிவ.வீ.மெய்யநாதன் தொகுதி முழுவதும் தேர்தல் பணிகள் முடித்துள்ள நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பல கட்சியினரும் எதிர்பார்த்திருந்தனர்.
தொகுதி முழுவதும் எதிர்ப்பு
இந்த நிலையில் மாலை வெளியான வேட்பாளர் பட்டியலில் டாக்டர் சதீஷ் பெயர் இடம்பெற்றிருந்தது. மெய்யநாதனுக்கு எதிர்பார்த்து வெடி வெடிக்க கடைவீதிகளில் காத்திருந்த உபிக்கள் வேட்பாளர் அறிவிப்பை பார்த்துவிட்டு கொண்டு வந்த வெடிகளை திருப்பி கொண்டு சென்றனர். மேலும் கொத்தங்கலம், வடகாடு, அணவயல், மறமடக்கி மற்றும் பல கிராமங்களில் எதிர்ப்பு துண்டுபிரசும் மற்றும் பதாகை வைத்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்ட திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாளை வேட்பாளருக்கு எதிர்ப்பு
இதேபோல திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாளையங்கோட்டையில் திமுகவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே வேளையில் மைதீன் கானுக்கு ஆதரவளித்து சிலர் பட்டாசு வெடித்தனர். இதனால் இந்த இரு தரப்புக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. பாளையங்கோட்டையில் டி.பி.எம். மைதீன் கான் நான்காவது முறையாக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.