சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடுவிப்பு !
கடலூர்: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும், இவரது மனைவி செந்தமிழ்ச் செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்கு நடைபெற்று வந்தது.
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தன் மீதும், குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரியும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை வழக்கின் மீது நீதிபதி குணசேகரன் தீர்ப்பளித்தார். அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, குறைவான அளவுக்கே அவரது சொத்து மதிப்புகள் உள்ளன. எனவே, வழக்கிலிருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்படுகின்றனர் என உத்தரவிட்டார்.