எனக்கு இந்த 2 அமைச்சர்களை ரொம்ப பிடிக்கும்.. ஏன் தெரியுமா? திமுக எம்எல்ஏ பேச்சால் குலுங்கிய சட்டசபை
திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யா மொழி தமக்கு 2 அமைச்சர்களை மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.
சென்னை: திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யா மொழி தமக்கு 2 அமைச்சர்களை மிகவும் பிடிக்கும் என கூறி அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் போக்குவரத்துத்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிமுக அமைச்சர்கள் வரிசையில் தமக்கு 2 அமைச்சர்களை மிகவும் பிடிக்கும் என்றார்.
பேசவே மாட்டாங்க
ஒருவர் பாலகிருஷ்ணாரெட்டி மற்றொருவர் பாஸ்கரன் என்றார். இந்த இருவரும் தமக்கு மிகவும் பிடித்தவர்கள் என்றும், ஒருவர் எப்போது சிரித்தமுகத்துடன் இருப்பார் என்றும் மற்றொருவர் அமைதியாகவும் இருப்பார் என்றும் அன்பில் பொய்யாமொழி கூறினார்.
தமக்கு வசதியாக இருக்கும்
அதேபோல், அனைத்து அமைச்சர்களும் இருந்தால் தமது உரையை முடிக்க வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதனால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
வருவதும் தெரியாது போவதும் தெரியாது
அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மிகப்பெரிய அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவைக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.
மீண்டும் சிரிப்பலை
அந்த அளவுக்கு அமைதியானவர் என்று தெரிவித்தார். அவரை போலவே மற்ற திமுக உறுப்பினர்களும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறினார். இதனால் மீண்டும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டசபையில் உதயநிதி
திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸின் பேச்சால் சட்டசபை சிரிப்பலையில் குலுங்கியது. இதனிடையே அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுவதை பார்க்க அவரது நண்பர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டசபைக்கு வந்திருந்தார்.