மருத்துவமனையில் சிகிச்சைபெறும் கருணாஸுடன் திமுக எம்எல்ஏ திடீர் சந்திப்பு!
நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸை திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை: நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸை திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
எம்.எல்.ஏ. கருணாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு ஒன்றில் நெல்லை போலீஸ் தேடிவந்த நிலையில் கருணாசுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கருணாஸுடன் சந்திப்பு
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எம்எல்ஏ கருணாஸை திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் ஜெ.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
கருணாஸை நீக்க முடியாது
அப்போது அவர் பேசியதாவது, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சபாநாயகருக்கு அதிகாரமில்லை என தீர்ப்பு வந்தால் கருணாஸை நீக்க முடியாது.
திமுக பரிசீலிக்கும்
சபாநாயகர் அவசரப்பட்டு கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. சபாநாயகரை நீக்குவது தொடர்பாக சட்டசபை கூடும்போது திமுக பரிசீலிக்கும்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். இவ்வாறு ஜெ.அன்பழகன் தெரிவித்தார். ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கருணாஸை சந்தித்த நிலையில் திமுக எம்எல்ஏவும் கருணாஸை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.