நிதி பற்றாக்குறையில் அரசு.. எனக்கு சம்பளமே வரவில்லை.. சட்டசபையில் தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
மாநில அரசு நிதி பற்றாக்குறையில் தத்தளிப்பதை சுட்டிக்காட்டி தனக்கு சம்பளம் வரவில்லை என்று திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை: தனக்கு கொடுக்கப்பட்ட சம்பள காசோலை திரும்பி வந்துவிட்டதாக திமுக எம்.எல்.ஏ, ஜெ.அன்பழகன் சட்டசபையில் புகார் கூறினார்.
மாநில அரசு நிதி பற்றாக்குறையில் தத்தளிப்பதை சுட்டிக்காட்டி பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் நேற்று விவாதம் நடைபெற்றது.
திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் பேசுகையில், தமிழக புயல் நிவாரணத்திற்கு, மத்திய நிதி கேட்டுள்ளீர்கள். மாநிலத்தின் வறட்சிக்கும் நிவாரணம் கோரியுள்ளீர்கள். ஆளுநர் உரையில் 6 பக்கங்கள், வெறும் கடன் கேட்பதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. நிவாரணத்திற்காக, மத்திய அரசிடம், தமிழகம் கையேந்தி நிற்கிறது என்பதையே இது காண்பிக்கிறது.
வறட்சி பாதிப்புக்கு, தமிழக அகரசு தனது நிதியில் இருந்து, 500 கோடி ரூபாய், முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை, எப்போது மத்திய அரசு தரும் என்பதை தெரிவிக்க முடியுமா. அடுத்த ஆண்டு, ஆளுநர் உரையில், மத்திய அரசு நிதி தரவில்லை என்றுதான், சொல்லப் போகிறீர்கள் என்றார்.
மேலும் சென்னை நடுக்குப்பம் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான மக்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு, புதிதாக மீன் மார்க்கெட் கட்டித்தர வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெ.அன்பழகன் வலியுறுத்தினார்.