தக்கலை அரசு மருத்துவமனையின் தில்லுமுல்லுகளை கையும் களவுமாக கண்டுபிடித்த திமுக எம்எல்ஏ
தக்கலை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் அங்கு நடைபெற்ற முறைகேடுகளை கண்கூடாக பார்த்தார்.
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் மருத்துவமனையில் நடைபெற்ற குறைபாடுகளை கண்டறிந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ளது தேசிய தரச்சான்றிதழ் பெற்றது. இங்கு பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பத்மநாபபுரம் திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜுக்கு புகார் வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவர் ஒருவர் சிகிச்சை பெற வந்த நோயாளியிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகவும் புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு எம்எல்ஏ இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பல மருத்துவர்கள் பணிக்கு வராமலும் , சில தாமதமாக வந்ததையும் அவர் கண்டார். மருத்துவர்களின் வருகைக்காக நோயாளிகள் ஏராளமானோர் காத்திருந்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட எம்எல்ஏ மனோ தங்கராஜ் ஆய்வின் போது நடந்தவற்றை புகாராக கூறினார். தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனையும் அவர் தொடர்பு கொண்டு புகார் கூறினார். இந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களையும், இளைஞர்களையும் திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக எம்எல்ஏ மனோ தங்கராஜ் எச்சரித்தார்.