#KeluChennaiKelu... மக்கள் தொண்டுக்கு நான் எப்போதும் ரெடி.. சபாஷ் ஜெ. அன்பழகன்!
சென்னை: மக்களுக்கு தொண்டாற்ற நான் எப்போதும் தயார் என்று அறிவித்துள்ளார் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று அறப்போர் இயக்கம் சார்பில் கேளு சென்னை கேளு என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சென்னை வெள்ளம் தொடர்பான கூட்டம் இது. ஆனால் யாருமே வரவில்லை. திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் மட்டும் இதில் கலந்து கொண்டு பேசினார். மக்களின் கருத்துக்களையும் கேட்டார்.
இதுகுறித்து தனது பேஸ்புக்கில் அவர் போட்டுள்ள கருத்து:
கேளு சென்னை கேளு..!
சென்னை மழை வெள்ளத்தில் மீண்டும் மூழ்காமல் காக்க அறப்போர் இயக்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தோம்.
இக்கூட்டத்தை வெகு விமர்சையாக நடத்திய அறப்போர் இயக்கத்தின் தோழர்களுக்கு எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தொண்டு செய்ய துடிக்கும் அனைவருக்கும் என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு என்று கூறியுள்ளார் அன்பழகன்.