தென்னகத்து கறுப்பர்களை பாஜகவினர் சகித்துக் கொள்வது பெரிய விஷயம்தான்.. டிஆர்பி ராஜா விளாசல்
தமிழர்கள் கருப்பர்கள் என்று கூறி நிற வெறியோடு பேசிய பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய்க்கு எம்எல்ஏ டிஆர்பி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக பாஜக தலைவர்கள், எங்களைப் போன்ற கறுப்பர்களை சகித்துக்கொண்டிருப்பது பெரிய விஷயம்தான் என்று தருண் விஜய் விவகாரத்தில் திமுக எம்எல்ஏவும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டிஆர்பி ராஜா நக்கலடித்துள்ளார்.
அல்-ஜசீரா நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜகவின் தருண் விஜய், தென்னிந்தியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார். தென் இந்தியர்களை கறுப்பர்கள் எனக் குறிப்பிட்டு எங்களை சுற்றிலும் கருப்பின மக்கள் வாழ்கிறார்கள், நாங்க அவர்களுடன் சேர்ந்து வாழவில்லையா என்று அவர் நிறவெறியுடன் பேசியுள்ளார்.
அவரது இந்த கேவலமான பேச்சுக்கு தென்னிந்தியா முழுவதும் கடும் விமர்சனமும், கண்டனமும் எழுந்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பாஜக தலைவர்கள் கருப்பாக இல்லையா? அவர்களுடன் சகித்துக்கொண்டு எப்படி வாழ்கிறார் தருண் விஜய் என்றும் கேட்டுள்ளனர். தருண் விஜய்யின் உண்மை முகம் இப்போது புலப்படுகிறது என்று கேட்டு பதிவிட்டு வருகின்றனர்.
My fellow southees ... #BJP says it's not #racist ... they are magnanimous enough to live alongside us #Blacks 😕😏😏😏😕#Black&Proud #racistbjp https://t.co/k8t1fsJOq0
— T R B Rajaa (@TRBRajaa) April 7, 2017
திமுக எம்எல்எவும் டி.ஆர். பாலுவின் மகனுமாகிய டிஆர்பி ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். கறுப்பு என்றுமே பெருமைக்குரியது. பாஜகவிற்கு நிறவெறி கிடையாது என்று தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தருண் விஜய் பேசிய கருத்து நிறவெறியில்லையா? பாஜகவினர் தென்னகத்து கறுப்பர்களை சகித்துக் கொள்வது பெரிய விஷயம்தான் என்று நக்கலாக கேட்டுள்ளார்.