'மைனாரிட்டி அரசு', 'பினாமி அரசு'.. சட்டசபையில் அமளி துமளி: திமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்
சென்னை: திமுக காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களினால்தான் மின்சாரம் அதிகவிலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது என்று சட்டசபையில் நத்தம் விஸ்வநாதன் பேசியதால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மைனாரிட்டி திமுக அரசு என்று அமைச்சர் சொன்னதற்கு எதிராக முழக்கமிட்டதால் திமுகவினர் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வது குறித்து தமிழக சட்டசபையில் எதிர்கட்சியினர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்துக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட மின்சாரம் முழுமையாக கிடைத்தால் தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியமே இல்லை.
மெரிட் ஆர்டர் டெஸ்பாச் திட்டத்தின் கீழ் கிடைக்கும் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. மெரிட் ஆர்டர் டெஸ்பாச்சில் உள்ள பற்றாக்குறையை சமாளிக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்படுகின்றன. குறைந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு படிப்படியாக மின்சாரத்தின் விலை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதல் படி கொள்முதல் நடப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
தன்னுடைய விளக்கத்தை முடிக்கும் போது கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு மைனாரிட்டி திமுக அரசில்கொண்டு வரப்பட்ட திட்டங்களை காரணம் என்று கூறினார்.
இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மைனாரிட்டி அரசு என்று நீங்கள் கூறினால் நாங்கள் பினாமி அரசு என்று இந்த அரசை கூறுவோம் என்று திமுக உறுப்பினர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு அதிமுக எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாலினின் பேச்சுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில் கூறினார்.
இதனையடுத்து சபாநாயகர் ஸ்டாலின் கூறிய பினாமி அரசு என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதனையடுத்து அமைச்சர் வைத்திலிங்கம் பேசும் போது கடந்த திமுக ஆட்சியில் தான் தந்தை மகன் என்று இரண்டு பேர் ஆட்சி செய்தனர் அதுதான் பினாமி ஆட்சி. தற்போது நடைபெறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்றார்.
இதனை அவைக்குறிப்பில் சபாநாயகர் ஏற்றினார். இதற்கு திமுகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். சபைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.
அனைவரும் அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டதால் சட்டசபையில் அமளி ஏற்றப்பட்டது. இதனையடுத்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டசபையை விட்டு கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக அமைச்சர் விஸ்வநாதன் தனது உரையை தொடங்கும் போது அவைக்கு வந்தவர்கள்... வராதவர்கள்... என்று கூறினார் இதற்கு தேமுதிக எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.