ரதயாத்திரைக்கு ஸ்டாலின் கண்டனம்... முதல்வர் விளக்கம் - சட்டசபையில் அமளி துமளி
ராம ரதயாத்திரைக்கு அனுமதி அளித்தது பற்றி சட்டசபையில் திமுக கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் விளக்கம் அளித்தார். அதை ஏற்க மறுத்து எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
Recommended Video
சென்னை: ரதயாத்திரையால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் எதிர்கட்சியினர் ரத யாத்திரையை அரசியலாக்க முயல்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது.
மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை கல்லுப்பட்டி, திருமங்கலம் மதுரை வழியாக இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.
சட்டசபையில் எதிர்ப்பு
தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்டசபையில் தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரபட்டது. தி.மு.க செயல் தலைவர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். தமிழகத்தில் ராமராஜ்ஜிய ரத யாத்திரையால் ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக காவல்துறை டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க வேண்டும். தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்துதான் ரத யாத்திரை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அங்கெல்லாம் பிரச்னை ஏற்படவில்லை. தமிழகத்தில் எல்லா மதத்தினருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்று கூறினார் முதல்வர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எதிர்கட்சியினர் அரசியல் ஆதாயம்
ரத யாத்திரை விவகாரத்தில் தேவையில்லாமல், அரசியல் சாயம் பூச வேண்டாம். எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்க 129 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயக நாடு, இங்கு எந்த மதத்தையும் தடை செய்ய முடியாது அனைவருக்கும் உரிமை உண்டு என்றார். எதிர்கட்சியினர் அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்ய வேண்டாம் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கூண்டோடு வெளியேற்றம்
முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றுகூறி சபாநாயகரை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அமைதி காக்குமாறு சபாநாயகர் தனபால் வேண்டுகோள் விடுத்தும், தொடர்ச்சியாக திமுக எம்.எல்.ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் சட்டசபை அமளி துமளியானது. அவையை நடத்த அனுமதி கொடுங்கள் என்று கூறியும் திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிடவே அனைவரையும் வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
ஒபிஎஸ் புகார்
இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். தமிழகம் அமைதி பூங்காவாக சிறந்து விளங்குகிறது. இதை பொருக்க முடியாமல் ஸ்டாலின் செயல்படுகிறார். காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில் ரதயாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளனர் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். ரத யாத்திரையால் சட்டசபை அமளி துமளியானது.