சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 1 வாரம் சஸ்பெண்ட்- குண்டுக்கட்டாக வெளியேற்றம்!!
சென்னை : தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் 1 வாரம் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். முன்னதாக சபையில் அமளியில் ஈடுபட்டதால் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்டோடு குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்று இன்று பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை அவைக் காவலர்களால் குண்டுகட்டாக தூக்கி வரப்பட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது எதிர்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று வீட்டு வசதித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அமைச்சர்கள் பதிலளித்து பேசிய பின்னர், திருப்பூர் தெற்குத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் பேசினார். அப்போது அவர், நமக்கு நாமே என்று கூறியவர்கள் கோட்டையை பிடிக்காமல் போய்விட்டனர் என்று கூறினார்.
இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதை சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். அதற்கு சபாநாயகர் தனபால், உறுப்பினர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்ல வில்லை. நமக்கு நாமே பயணம் மேற்கொண்டவர்கள் கோட்டையை பிடிக்காமல் போய்விட்டனர் என்ற கூறியதாக தெரிவித்தார்.
நமக்கு நாமே
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சபாநாயகரைக் கண்டித்தும் திமுக எம்.எல்.ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தும் திமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து திமுக எம்.எல்.ஏக்களை ஒட்டுமொத்தமாக சபைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
குண்டு கட்டாக வெளியேற்றம்
சபாநாயகர் உத்தரவைத் தொடர்ந்து அவையில் அமர்ந்து கூச்சலிட்ட திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை காவலர்கள் கட்டாயப்படுத்தி தூக்கி வந்து அவைக்கு வெளியே விட்டனர்.
|
துரைமுருகன் மயக்கம்
அவைக்காவலர்கள் எதிர்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகனை தூக்கி வெளியேற்றிய போது அவர் மயக்கமடைந்தார். அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் சபாநாயகருக்கு எதிராக முழக்கமிட்டனர். 15வது சட்டசபை கூடிய பின்னர் முதன் முறையாக 88 திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
ஒருவாரம் சஸ்பெண்ட்
அதே நேரத்தில் கூச்சலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் தீர்மானம் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து இன்று பேரவைக்கு வந்த 88 திமுக எம்.எல்.ஏக்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார்.