ஸ்மால் பஸ்களில் இரட்டை இலை விவகாரம்: சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்!
இன்று சட்டசபையில் திமுக உறுப்பினர் எழுந்து ஸ்மால் பஸ்களில் இரட்டை இலை வரையப்பட்டிருக்கும் பத்திரிகைகளைக் காட்டி பேசத் தொடங்கினார். ஆனால் சபாநாயகர் இதற்கு அனுமதி மறுத்தார்.
இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஸ்மால் பஸ் தொடர்பான செய்தி வெளியிடப்பட்டிருந்த பத்திரிகைகளை உயர்த்தியபடியே முழக்கமிட்டனர். சபாநாயகர் அவர்களை இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்ட போதும் திமுகவினரின் முழக்கம் தொடர்ந்தது.
இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற சபைகாவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து திமுக உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளியேற்றனர்.
பின்னர் சபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன், தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுதான் தமிழக முதல்வர் ஸ்மால் பஸ்களில் இரட்டை இலை சின்னத்தை வரைந்திருக்கிறார். இதனை உடனே நீக்க வேண்டும் என்றார்.