உரிமைக் குழு நோட்டீஸ் விவகாரம்: அவகாசம் கேட்டு திமுக கடிதம்!
சட்டசபைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்களை கொண்டு வந்த விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீஸ் அளித்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் தனபாலை இன்று சந்திக்கின்றனர்.
சென்னை : சட்டசபையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகளை கொண்டு வந்து காட்டிய விவகாரத்தில் அவகாசம் கோரி திமுகவினர் கடிதம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு உள்ளதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சென்னையில் திமுக மேற்கொண்ட களஆய்வில் பான் மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக ஆதாரங்களுடன் ஸ்டாலின் நிரூபித்தார். மேலும் சட்டசபையிலேயே தடை செய்யப்பட்ட குட்கா பாகெட்டுகளை காட்டினார்.
இது சட்டத்தை மீறிய செயல் என்று ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து உரிமை மீறல் குழு கூடி இது குறித்து விளக்கமளிக்குமாறு ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து அவகாசம் முடியும் நிலையிலும் திமுக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உரிமைக்குழுவிடம் பதில் தாக்கல் செய்ய அவகாசம் கோரலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து திமுக எம்எல்ஏக்கள் உரிமைக்குழுவிடம் பதிலளிக்க அவகாசம் கேட்டு கடிதம் அளித்துள்ளனர்.
திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரிமைக்குழுவிடம் விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் கோரப்பட்டுள்ளதாக கூறினார். இது குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.