சட்டசபையில் அமளி... சாலை மறியல் - ஸ்டாலின் கைது
தலைமை செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
சென்னை: சட்டசபையில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும் ரத யாத்திரைக்கு எதிராகவும் சாலையில் மறியல் செய்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் வி.எச்.பி. ரத யாத்திரைக்கு எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரத யாத்திரைக்கு மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறிய ஸ்டாலின், சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
ரத யாத்திரை குறித்து டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்திய ஸ்டாலின் இது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? என விமர்சித்தார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்றும் 5 மாநிலங்களில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் யாத்திரை வந்துள்ளது. யாத்திரையால் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கம் அளித்தார்.
அதை ஏற்க மறுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அமளி துமளியில் ஈடுபட்டனர். இருக்கையில் அமர கோரி சபாநாயகர் வலியுறுத்தியும் அவர்கள் அமளியில் ஈடுபடவே கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடை செய் தடை செய் என்று சாலையில் அமர்ந்து அனைவரும் முழக்கமிட்டனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு ராயப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும், எம்எல்ஏ தமிமுன் அன்சாரியும் மறியலில் ஈடுபட்டார்.