ஆதாரம் அளித்தும் வீடியோ விவகாரம் பற்றி பேச அனுமதி மறுப்பு- திமுக 3வது நாளாக வெளிநடப்பு
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை பேச அனுமதிக்க மறுத்த சபாநாயகரைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் 3வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் தொடர்பான வீடியோ பற்றி பேச செயல் தலைவர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து திமுக எம்எம்எல்ஏக்கள் அனைவரும் ஸ்டாலின் தலைமையில் 3வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை 3வது நாளான இன்று கேள்வி நேரத்துடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. எம்எல்ஏக்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
கேள்வி நேரம் முடிந்த உடன் நேரமில்லா நேரத்தில் பேச எழுந்தார் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின். எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் தொடர்பாக பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். நேற்றைய தினம் ஆதாரம் அளித்தால் பேசலாம் என்று சபாநாயகர் கூறினார். சிடி ஆதரத்துடன் பேச முயற்சி செய்தும் அனுமதிக்க மறுத்த சபாநாயகர் ஸ்டாலின் பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.
சபாநாயகரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் இன்று மூன்றாவது நாளாக வெளிநடப்பு செய்துள்ளனர்.