ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- திமுக திடீர் வியூகம்!
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தங்களுடன் கமுக்கமாக கைகோர்த்துவிட்டதால் இனி குடைச்சல் இல்லை என நினைத்து கொண்டிருக்கும் எடப்பாடி தரப்புக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதிர்ச்சி வைத்தியம் தர திமுக வியூகம் வகுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் சசிகலா, தினகரன் தரப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறது எடப்பாடி கோஷ்டி. இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலம் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என நினைக்கிறது எடப்பாடி தரப்பு.
மொய் விருந்து
இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களுடன் நெருக்கம் காட்ட தொடங்கியது எடப்பாடி அணி. அத்துடன் திமுக தலைமையையும் சமாளிக்க 'மொய் விருந்து' நடத்தியும் பார்த்தது.
திமுக மீது அதிருப்தி
அதேநேரத்தில் எடப்பாடி அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் திமுகவும் அமைதி காப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிருப்தியை சமாளிக்க திமுக தடாலடி வியூகம் வகுத்து வருகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாரை ஆதரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அதிரடியாக எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம் என திட்டமிட்டுள்ளதாம் திமுக.
Recommended Video
திடீர் அதிரடி ஏன்?
ஏற்கனவே கூவத்தூர் நிகழ்வுக்குப் பிறகு, தி.மு.கவின் வேகம் போதவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதை சரிசெய்யும் வகையில்தான் இப்படி ஒரு அதிரடியை காட்டலாம் என நினைக்கிறதாம் திமுக தலைமை.