திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம்... 'எதிர்காலம்' கருதி ஆப்சென்ட் ஆகும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!
சென்னை: சட்டசபையில் திமுக விரைவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என்றும் அதற்கு ஆதரவாக தங்களது எதிர்காலம் கருதி சில அதிமுக எம்.எல்.ஏக்கள் சபைக்கே வராமல் இருப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்' என்ற கருத்தில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. நேற்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஆளுநர் கூறியதாக வெளியான தகவல்களால் தி.மு.க தலைமை கொந்தளிப்பில் இருக்கிறது.
கைப்பிடித்து சேர்த்து வைத்த ஊழல் அரசைக் காப்பாற்றுவதற்கு ஆளுநர் துணை போகிறார்' எனக் கொதிக்கின்றனர் தி.மு.க முன்னணி தலைவர்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, சி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினர்.
கைவிரித்த ஆளுநர்
இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த திருமாவளவன், தற்போதுள்ள சூழலில் ஆளுநரால் நேரடியாகத் தலையிட முடியாது. இரு குழுக்களாக அ.தி.மு.கவினர் பிரிந்துள்ளதால், உள்கட்சி விவகாரத்தில் ஆளுநர் தலையீடு இருக்க முடியாது எனக் கூறிவிட்டார் எனப் பேட்டியளித்தார்.
ராஜ்நாத் சிங்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், அ.தி.மு.க விவகாரத்தில் தலையிட முடியாது என உறுதியாகக் கூறிவிட்டார். ஆளுநரை சந்தித்த பிறகு மூன்று கட்சித் தலைவர்கள் கூறிய கருத்து, தி.மு.கவை ரொம்பவே உசுப்பிவிட்டது.
திமுக தயங்காது
அதனால்தான், எங்களிடம் உள்ள பந்தைப் பயன்படுத்த தி.மு.க எள்முனையளவும் தயங்காது என கருத்து தெரிவித்தார் ஸ்டாலின். இந்நிலையில் ஜனாதிபதியை சந்தித்துப் பேசியுள்ளனர் தி.மு.க எம்.பி.க்கள். அதன் பின்பும் உறுதியான நடவடிக்கை இல்லாவிட்டால், சட்டரீதியாகவே போராடுவது என முடிவெடுத்துள்ளாராம் ஸ்டாலின்.
தூது அனுப்பும் அதிமுக எம்.எல்.ஏக்கள்
இதனிடையே தி.மு.க தரப்புக்கு ஆளும்கட்சி தரப்பில் இருந்து சில எம்.எல்.ஏக்கள் தூது அனுப்பியுள்ளனர். அ.தி.மு.கவில் இதே சண்டை நீடித்தால் அடுத்து வரும் தேர்தல்களில் எம்.எல்.ஏ ஆக முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து வைத்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் செய்து வருகின்றனர்.
ஸ்டாலின்
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது, சபைக்கு வராமல் ஒதுங்கிவிடுவது என்ற முடிவிலும் சில அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் உறுதியாக உள்ளனர். தற்போதுள்ள சூழலில், காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்பட நினைக்கிறார் ஸ்டாலின். அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறாராம் ஸ்டாலின்.