சட்டசபை உரிமைக்குழு நோட்டீசுக்கு எதிராக ஹைகோர்ட்டில் திமுக வழக்கு! நடவடிக்கையிலிருந்து தப்ப திட்டம்
சென்னை: சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் பொருட்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் தடையை மீறி விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த குட்காக்களை எடுத்து சபாநாயகர் பார்க்கும்வகையில் காண்பித்தனர். ஜூலை 19ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது.
தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் எடுத்து வந்தது குற்றம் என கூறிய சபாநாயகர், ஸ்டாலின் உள்ளிட்டோர் செய்தது தவறா இல்லையா என்பதை முடிவு செய்ய உரிமை குழுவிற்கு இப்பிரச்சினையை அனுப்பி வைத்திருந்தார்.
இந்த நிலையில் அரசியல் நிலவரம் மாறியுள்ள சூழலில் குட்காவை சட்டசபைக்குள் கொண்டு வந்தது குறித்து திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உரிமைக்குழு. 7 நாட்களுக்குள் திமுக எம்எல்ஏக்கள் பதிலளிக்க அவை உரிமைக்குழு உத்தரவிட்டிருந்தது.
திமுகவினரை சஸ்பெண்ட் செய்துவிட்டு தேவைப்பட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டு காய்நகர்த்துவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். எனவே இதை தவிர்க்க நீதிமன்றத்தை நாடியுள்ளது திமுக.
சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. சென்னை ஹைகோர்ட்டில் திமுக வழக்கறிஞர் நீலகண்டன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு செப்டம்பர் 7ஆம் தேதி ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை பெற திட்டமிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.