காவிரி மேலாண்மை வாரியம்.. ஜனாதிபதி பிரணாப்பை இன்று சந்திக்க திமுக எம்.பி.க்கள் திட்டம் ?
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க திமுக எம்.பி.,க்கள் கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் திடீரென நிலைப்பாட்டை மாற்றி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இது தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது காவிரி விவகாரம் தொடர்பான கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை குடியரசுத் தலைவரிடம் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அதிமுகவின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்கள் அனைவரும் ஒன்று திரண்டு பிரதமர் மோடியை சந்திக்க பேரணியாக பிரதமர் அலுவலகம் சென்றனர். அதில் தம்பித்துரை உள்ளிட்ட சில எம்.பிக்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.