நம்பிக்கை வாக்கெடுப்பு சட்ட விரோதமானது.. திமுக எம்பிக்கள் ஆளுநரிடம் மனு
சட்டசபையில் எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு சட்ட விரோதமானது என்று திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, எஸ். ஆர். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு போது சட்டசபையில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து திமுக எம்பிக்கள் ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நேற்று கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையான ரகசிய வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து 2 முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது. என்றாலும், தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவியதால் சபாநாயகர் திமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனைக் கண்டித்து சட்டசபை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது.
இது தொடர்பான ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து நேற்றே புகார் அளித்தார். இன்று இந்த சம்பவங்கள் தொடர்பாக திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கூட்டாக ஆளுநர் மாளிகைக்கு சென்று மனு ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி சிவா கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பில் கொடுக்கப்பட்ட மனு ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது நடைபெற்ற வன்முறைகள் குறித்து ஆளுநரிடம் விளங்கியுள்ளோம். மேலும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லாத போது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு சட்ட விரோதமானது. அதே போன்று காவல்துறையினர் சட்டசபைக் காவலர்கள் உடையில் உள்ளே புகுந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்றியிருக்கிறார்கள். இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல். இது குறித்தெல்லாம் ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம் என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.