சட்டசபை மார்ஷல் சீருடையில் போலீஸ் அதிகாரிகளை வரவழைத்த சபாநாயகர்- ஆளுநரிடம் திமுக எம்பிக்கள் புகார்
போலீஸ் அதிகாரிகளை சட்டசபை காவலர்கள் சீருடையில் சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டசபை செயலர் ஜமாலுதீன் வரவழைத்தது குறித்து ஆளுநரிடம் திமுக எம்பிக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை: போலீஸ் அதிகாரிகளை சட்டசபை காவலர் சீருடையில் சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டசபை செயலர் ஜமாலுதீன் வரவழைத்தது தொடர்பாக ஆளுநர் வித்யாசகர் ராவிடம் திமுக எம்.பிக்கள் இன்று புகார் தெரிவித்தனர்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சபை நடவடிக்கைகள் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
ஸ்டாலின் உள்ளிட்டோரை வெளியேற்றிய சபை காவலர்கள் பலரும் போலீஸ் அதிகாரிகள்; அவர்கள் சட்டசபை காவலர்கள் சீருடை அணிந்து திமுகவினரை வெளியேற்றினர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு ஆதாரமாக சட்டசபை செயலர் ஜமாலுதீன் நேற்று பிற்பகல் சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றும் வெளியானது.
இந்த நிலையில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது போலீஸ் அதிகாரிகளை சட்டசபை காவலர்கள் சீருடையில் வரவழைத்தது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்தவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.