நெடுவாசல் போராட்டம் : பெட்ரோலியத்துறை அமைச்சருடன் கனிமொழி, திருச்சி சிவா சந்திப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா சந்தித்து பேசினர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 14வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நெடுவாசல் மக்கள் விரும்பாவிடின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடத் தயார் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாக, பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். எனினும் மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. தமிழக முதல்வரும் போராட்டத்தைக் கைவிடுமாறு நெடுவாசல் கிராம மக்களை கேட்டுக்கொண்டார். எனினும் மத்திய அரசு அறிக்கை வெளியிடாத வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் திமுக எம்.பிக்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசினர். திமுக எம்.பி.க்கள் கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் டெல்லி இல்லத்தில் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினர் அப்போது அவர்கள் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, மாநில அரசு ஒப்புதல் தராவிட்டால் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று தர்மேந்திர பிரதான் கூறியதாக தெரிவித்தார். மக்களின் ஒப்புதலை பெறாமல் திட்டத்தை எதிர்ப்பவர்களை விஞ்ஞானிகளா என்று ஆராயக்கூடாது என்று கூறியதாகவும் தெரிவித்தார். மக்கள் அனுமதித்தால் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியதாகவும் திருச்சி சிவா தெரிவித்தார்.