ஸ்டாலினுக்கு செக் வைத்த திருமாவளவன்.. டெல்லி பயணம், பேட்டியால் திமுக 'கடுகடு'
திருமாவளவனின் டெல்லி சந்திப்புகள் திமுகவை கடுப்பேற்றிவிட்டதாம்.
சென்னை: தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க திமுக முயற்சிக்கிறது.. அதேநேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ காங்கிரஸ் தலைமையில் மட்டுமே தேர்தலை சந்திப்போம் என கூறியிருப்பது திமுகவை அதிருப்தி அடைய வைத்துள்ளதாம்.
திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தைகளை திமுக முன்னெடுத்து வருவது காங்கிரஸ், இடதுசாரிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இடம்பெறுவதை எப்போதும் விரும்பியதில்லை. வேறுவழியில்லாமல் காங்கிரஸை வேண்டா வெறுப்பாக திமுக சுமந்து கொண்டது தேர்தல் களத்தில்.
சிறுத்தைகள் வாக்குகள் தங்களது அணிக்கு வரும் என்பதில் திமுகவுக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. இதனால் காங்கிரஸ், சிறுத்தைகளை வெளியேற்றும் முயற்சியாகவே மூன்றாவது அணி பேச்சுகளை திமுக முன்னெடுக்கிறது என கூறப்படுகிறது.
இதை ரசிக்கவில்லை காங்கிரஸ். அதனால்தான் பாஜக, காங்கிரஸ் அணிகளால்தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருந்தார். அதே நேரத்தில் திருமாவளவனோ, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அணியில்தான் போட்டி என்றே அறிவித்திருக்கிறார்.
முன்னதாக மூன்றாவது அணியை தொடக்கம் முதலே எதிர்க்கும் சீதாராம் யெச்சூரியை திருமாவளவன் சந்தித்தார். பின்னர் ராகுல் காந்தியை சந்தித்து திமுவுக்கு செக் வைக்கும் பேட்டியை அளித்தார் திருமாவளவன். அவரது இந்த நடவடிக்கைகளும் பேட்டிகளும் திமுகவை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.