காங்கிரஸ் கட்சிக்கு 30 சீட் தர முன்வந்த திமுக... பகிரங்கப்படுத்தினார் எஸ்றா சற்குணம்
சென்னை: திமுக 30 சீட் தருவதாக கூறியுள்ளது. அதை காங்கிரஸ் கட்சி சிக்கல் தராமல் பவ்யமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பேராயர் எஸ்றா சற்குணம் கூறியுள்ளார்.
இவரது பேச்சிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு திமுக இறுதியாக 30 சீட் வரை கொடுக்க முடிவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி கூடுதல் சீட் கேட்டு வருவதால் இழுபறியாக உள்ளது.
திமுக கூட்டணியில் முதல் ஆளாக வந்து சேர்ந்த கட்சி காங்கிரஸ். ஆனால் அக்கட்சியுடன் இன்னும் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாமல் உள்ளது திமுக. அதற்குப் பின்னால் வந்து சேர்ந்த கட்சிகளுக்கு தற்போது தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்து வருகிறது திமுக.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக எத்தனை சீட் தரவுள்ளது என்ற ரகசியத்தை வெளியில் சொல்லியுள்ளார் பேராயர் எஸ்றா சற்குணம். நேற்று அறிவாலயத்தில், பேராயர்கள் பலர் புடை சூழ எஸ்றா சற்குணம் வந்தார். அங்கு தனது சமூக நீதி இயக்கத்தின் ஆதரவை திமுகவுக்குத் தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலினிடம் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவுக்கு எங்களது ஆதரவைத் தெரிவிக்க வந்தோம். காங்கிரஸுடன் என்ன இழுபறி குறித்து திமுக தரப்பிடம் கேட்டோம். நம்பர்தான் பிரச்சினை என்றார்கள்.
30 சீட் தருவதாக கூறுகிறோம். அவர்கள் கூடுதலாக கேட்கிறார்கள் என்று திமுக தரப்பு எங்களிடம் தெரிவித்தது. 30 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பெற்றுக் கொள்ள வேண்டும். பவ்யவமாக பெற்றுக் கொண்டு சுமூகமாக இதைத் தீர்க்கும் என்று நம்புகிறோம் என்றார் எஸ்றா சற்குணம்.
எஸ்றாவின் பேட்டி மூலம் காங்கிரஸுக்கு திமுக 30 சீட் தர முன்வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி எத்தனை சீட்களைக் கேட்கிறது என்பது குறித்து எஸ்றா தெரிவிக்கவில்லை.