தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்வதே மது ஒழிப்பிற்கு வழி கோலும் - கி.வீரமணி அறிக்கை
சென்னை: தமிழகத்தில் மதுவினை ஒழித்து நல்லாட்சி அமைந்திட திமுகவை வெற்றிப் பெறச் செய்வதே வழி என்று கூறியுள்ளார் திராவிடர் கழக தலைவரான கி.வீரமணி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் மதுவிலக்கைக் கொண்டு வந்துள்ளார் தமிழ்நாட்டிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமானால் நடக்க இருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
முதல்வர் நிதிஷ்குமார் தான் சொன்னதை செய்த மகத்தான ஆட்சியாளர், அரசியல்வாதி என்பதற்கு மேலாக மனிதகுலம் பேணும் மாமனிதர் என்பதையும் உலகுக்கே நிரூபித்து விட்டார்.
தமிழ்நாட்டு அரசு இதைக் கண்டு வெட்கப்பட்டாவது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, வெள்ளம் போல் ஓடும் மது விற்பனையைத் தடை செய்து மக்களைக் காப்பாற்ற வேண்டாமா? எண்ணற்ற தாய்மார்களின் துயரங்களைப் போக்கி துணைவனோடு அமைதியான குடும்பமாக வாழ வகை செய்ய வேண்டாமா? ஒருபுறம் விதவைகள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டே, மறுபுறம் "தாலிக்குத் தங்கம்" தரும் அரசு என்பது அசல் இரட்டை வேடமல்லவா?
இந்த லட்சணத்தில் தேர்தல் நடைபெறும் மே 16 வாக்கில் அந்தக் கால கட்டத்தில் ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு "டாஸ்மாக்" மதுபானம் விற்பனை ஆக வேண்டும் என்றுஇலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். அந்த அளவு விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது என்பது வெந்த புண்ணில் பாயும் வேல், நொந்த உள்ளங்களை மேலும் ரணமாக்கும் கடும் வேதனை தரும் அதிர்ச்சிச் செய்தி அல்லவா?
ஆளுங் கட்சியை வீட்டுக்கு அனுப்பும் ஆற்றல் உள்ள ஒரே மாற்றுக் கட்சியான திமுகவின் தலைவர் தெளிவாக்கியுள்ளார். "ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து மதுவிலக்குதான் மதுக்கடை ஒழிப்புதான்" என்று. தெளிவுள்ள வாக்காளர்கள் உள்ளபடியே மதுவிலக்கை விரும்புவர்கள் திமுகவை ஆதரிப்பதன் மூலம்தான் பீகார் போல மதுவிலக்கைக் கொணர முடியும் என்று புரிந்து கொள்ள வேண்டாமா? பீகார் வெற்றிபோல திமுக வெற்றி பெற்றால் முதல் கையெழுத்து மது விலக்கை ஒட்டியே இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை''என்று தெரிவித்துள்ளார்.