அதிமுக பக்கம் காங். சாய்வதால் 3வது அணிக்கு தாவுகிறது திமுக?
சென்னை: இந்தியாவின் நன்மைக்காக மூன்றாவது அணி அமைந்தால் வரவேற்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருப்பது தமிழகத்தில் மட்டும் டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அரசியல் அணிமாற்றங்களுக்கான சிக்னலையும் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக அணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது வழக்கம். பாரதிய ஜனதா கட்சியோ சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்பதுதான் தமிழக அரசியலின் பார்முலா. இடதுசாரிகளும் திமுக அல்லது அதிமுக அணியில் மட்டும் இடம்பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக அணியில் மட்டுமே இடதுசாரிகள் இடம்பிடிப்பது என்ற நிலைப்பாடுடன் திமுக அணிப்பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை என்ற நிலையை எடுத்திருந்தனர்.
திமுகவுடன் இணக்கம் காட்டிய காங்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் விலகி விலகிச் செல்லும் திமுகவுடன் இணக்கமான போக்கையே கடைபிடித்தும் வந்தது. அத்துடன் திமுக, காங்கிரஸ் அணியில் தேமுதிகவை இணைத்து லோக்சபா தேர்தலை சந்திக்கப் போவதாகவும் கூறப்பட்டது.
இடதுகளுடன் நெருக்கம் காட்டிய அதிமுக
இதேபோல் இடதுசாரிகளுடன் அதிமுகவும் நெருக்கம் காட்டியது. அதிமுக அணியில் நிச்சயம் இடதுசாரிகள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சீனுக்கு வந்த பாரதிய ஜனதா
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் மதிமுக கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. அத்துடன் பாஜக, மதிமுக மற்றும் தேமுதிகவை இணைத்து கூட்டணி உருவாக்கும் முயற்சிகளும் சிலரால் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களத்தில் இதுவரை பேசப்படாத பாஜகவும் முக்கியத்துவம் பெற்றது.
அதிமுக- காங்கிரஸ் கூட்டணி முயற்சி
இந்நிலையில்தான் திடீரென அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் நெருக்கம் காட்டுவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் ஆளுநர் ரோசய்யாவின் முயற்சியால் தொலைபேசியில் பேசியதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. அதிமுகவைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெற காங்கிரஸின் தயவு தேவை. திமுகவை விட அதிமுகவுடன் இணைந்தால் கூடுதல் இடங்கள் பெறலாம் என்பது காங்கிரஸ் கட்சியின் கணக்கு.
திமுகவுக்கு நெருக்கடி
பாரதிய ஜனதா அணி, 3வது அணி மற்றும் காங்கிரஸ் கட்சி என அனைத்து அணிகளுக்கும் அதிமுகவின் கதவு திறந்து வைக்கப்பட்டுவிட்டதால் திமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
பாஜக, 3வது அணிக்கு சிக்னல்
இந்த நெருக்கடியின் எதிரொலியாகவே ஏற்காடு இடைத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் ஆதரவையும் கோரி திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பினார் என்கிறது அறிவாலய வட்டாரங்கள். அத்துடன் ஓய்ந்துவிடாமல் இந்தியாவின் நலனுக்காக 3வது அணி அமைந்தால் அதனை வரவேற்போம் என்று அறிவித்ததுடன் 3வது அணியின் டெல்லி கூட்டத்துக்கு அழைப்பு வந்தால் ஆலோசிப்போம் என்று கூறி 3வது அணிக்கு வலுவான சிக்னலும் கொடுத்து வைத்திருக்கிறார் கருணாநிதி.
அதிமுக, திமுக இடையே போட்டி
தமிழகத்தில் காங்கிரஸ், 3வது அணி மற்றும் பாஜக அணி ஆகிய அனைத்துக்குமே அதிமுகவும் திமுகவும் இப்போது கதவை திறந்து வைத்திருக்கின்றன. இதனால் குழப்பத்தில் ஆழ்ந்து போயிருப்பது இரண்டு கட்சித் தொண்டர்களும்தான்.
இடதுசாரிகள், மதிமுகவுக்கு சிக்கல்?
மூன்றாவது அணியில் ஒருவேளை திமுக இணைந்தால் தீவிர அதிமுக ஆதரவு நிலையில் இருக்கும் தமிழக இடதுசாரிகளுக்கும் நெருக்கடி.. பாஜக அணியில் திமுக இடம்பெற்றால் தீவிரமாக திமுகவை எதிர்த்து பேசிவரும் மதிமுகவுக்கும் நெருக்கடி.
காலம் மாற காட்சிகளும் மாறும்.. காத்திருப்போம்.