நாகையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு... திமுக, விடுதலை சிறுத்தைகள் கருப்புக் கொடி
நாகையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை: நாகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநராக பதவியேற்றது முதல் கோவை, திருப்பூர், கடலூர் உள்ளிட்ட இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தனது அதிகார வரம்புக்கு மீறி ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் கடலூரில் கழிவறையை ஆய்வு செய்தபோது மூங்கில் கீற்று மறைப்பில் பெண் குளிர்த்து கொண்டிருந்ததை ஆளுநர் பார்த்ததாக பரபரப்பு கிளம்பியது. இதை சம்பந்தப்பட்ட பெண்ணும் ஆளுநர் மாளிகை அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்தன.
இத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் தனது ஆய்வு தொடரும் என்றே ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாகை மாவட்டம் அவுரி திடல் அருகே தூய்மை இந்தியா திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்த வந்த ஆளுநருக்கு எதிராக திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடியை காட்டினர்.
நாகையில் தூய்மை இந்திய திட்ட அலங்கார ஊர்தி பேரணி, மருத்துவ முகாம் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட கண்காட்சியையும் ஆளுநர் தொடங்கி வைக்கவுள்ளார்.
முன்னதாக நாகையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் கைது செய்யப்பட்டார்.