பண வினியோக பஞ்சாயத்தை முடித்துவிட்டே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்: திமுக கிடுக்கிப்பிடி
சென்னை: ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்த திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக (அம்மா அணி) சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். பன்னீர்செல்வத்தின் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். திமுக சார்பில், மருதுகணேஷ் போட்டியிட்டார்.
ஆனால் வாக்குப்பதிவு நெருங்கிய நிலையில், பணப்பட்டுவாடா புகாரை அடிப்படையாக வைத்து, தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில், வரும் டிசம்பருக்குள் ஆர்.கே.நகருக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கடந்த வாரம் அளித்த பேட்டியொன்றில் தலைமை தேர்தல் ஆணையர் கூறியிருந்தார்.
இதையடுத்து, திமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட்ட மருதுகணேஷ், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தலின்போது தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்தது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சிபிஐ விசாரணை தேவை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார் எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய பிறகுதான் ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்யும் முடிவை தேர்தல் ஆணையம் எடுத்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ள மருதுகணேஷ், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த கூடாது என கோரியுள்ளார்.