சட்டசபையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு: சாகப்போகும் போது சங்கரா சங்கரா என்கிறார் ஜெ.-ஸ்டாலின்
சென்னை: சாகப்போகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்கிறார் ஜெயலலிதா என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபை கூட்டத்திலிருந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்துள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, ஜல்லிக்கட்டு பிரச்சினையை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளதாக திமுகவும், தலித்துகள் மீதான தாக்குதலை ஆளும் அதிமுக அரசு கண்டுகொள்ளாததை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கும் முன்பாகவே திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், செம்பரம்பாக்கர் ஏரி திறப்பு தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். அமைச்சர் அலுவலகங்களிலேயே குண்டுவீச்சு தாக்குதல் நடைபெறும் அளவிற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார்.
"தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் விதி எண் 110-ஐ அதிகம் பயன்படுத்தியவர். எந்த அறிவிப்பையும் 110-ன் கீழ்தான் அறிவிப்பார். 110-உடன் '0' சேர்த்தால் 1100. அப்படித்தான் அம்மா அழைப்பு மைய சேவைக்கான தொலைபேசி எண்ணையும் அமைத்துள்ளார்.
சாகப்போகும் நேரத்தில் சங்கரா, கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம், காதில் பூ சுற்றுவது எனக் கூறுவதுண்டு. அதுபோலத்தான் ஆட்சி முடியும் தருவாயில் மக்கள் குறைகளை கேட்டு அதற்கு தீர்வு வழங்குவதாகக் கூறி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். முதல்வர் எப்போதாவது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே தலைமைச்செயலகம் வந்து செல்கிறார். காணொலி காட்சி மூலமே அரசின் பல்வேறு திட்டங்களும் துவக்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இவற்றையெல்லாம் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்" என்றார். செம்பரம்பாக்கம் ஏரியை முறையில்லாமல் திறந்த காரணத்தினால் பல உயிர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.பல உடமைகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தால் சென்னையே மாறிப் போயுள்ளது.அதற்கு ஒரு நீதி விசாரணை வைக்க வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறோம்,ஆக அதையெல்லாம் மூடி மறைப்பதற்காக,மக்களை திசை திருப்புவதற்காக இப்படிப் பட்ட திட்டங்களை தமிழக அரசு அரிவித்து வருகிறது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்
இதேபோல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தலித்துகள் மீதான தாக்குதலை தமிழக அரசு கண்டு கொள்வதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
அவையில் இருந்து வெளிநடப்பு செய்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் தலித்துகள் படுகொலை அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதேபோல ஆளுநர் உரையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அதிமுகவினரும் அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் அமர்ந்து ஆளுநர் உரையை கேட்டு வருகின்றனர்.