வன்னியர்களின் வசந்தமே.. வீர நடை போடு தாயே.. கனிமொழியை வாழ்த்தி கலக்கும் போஸ்டர்கள்
சென்னை: 2ஜி வழக்கில் இருந்து விடுதலையடைந்த முன்னாள் மத்திய அமைச்சர், ஆ.ராசா மற்றும், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்பினர்.
இதையடுத்து அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். கருணாநிதி, கனிமொழி, ஸ்டாலின் உருவ பதாகைகளை ஏந்தியபடி, அவர்கள் வரவேற்பு அளித்தனர்.
மேளம், நடனம், மயிலாட்டம், தாரை தப்பட்டை என விமான நிலையத்தை களை கட்ட வைத்தனர். திமுகவினர். விமான நிலைய வளாகத்தில் குட்டி மேடை அமைக்கப்பட்டு, ராசா, கனிமொழிக்கு சால்வை அணிவித்தும், வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜாதி வாழ்த்துக்கள்
இது ஒருபக்கம் என்றால், சென்னை நகரம் முழுக்க விதவிதமான போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. கனிமொழி மீது பல்வேறு ஜாதி சங்க தலைவர்களும் நல்ல மதிப்பு வைத்துள்ளனர். போஸ்டர்களிலும் அது வெளிப்பட்டது.
வன்னியர்களின் வசந்தம்
வன்னியர்களின் வசந்தமே வருக என்றும், வீர நடை நீ போடு தாயே என்று திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம், திருச்சிராப்பள்ளி என்ற பெயரில் தங்க. கோபிநாத் என்பவர் அடித்த போஸ்டரும் இதற்கு நல்ல உதாரணம்.
தலைவா பாணியில் தலைவி
விஜய் நடித்த தலைவா திரைப்பட டைட்டில் கார்ட் மாதிரியில், தலைவி என்று ஒரு போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் டைம் டூ லீட் என்ற அடிவாசகமும் இடம் பெற்றுள்ளது சிறப்பு. தலைமையேற்க நேரம் வந்துவிட்டது என்பது அதற்கு பொருள். இந்த வரியால்தான் தலைவா படம் ரிலீசான காலகட்டத்தில் சிக்கல் எழுந்ததாக கூறுவார்கள்.
வீழ்வேனென்று நினைத்தாயோ
இதேபோல இளஞ்சூரியனே, வீழ்வேனென்று நினைத்தாயோ, வீராங்கனையே.. என பல்வேறு கோஷங்களை அடிப்படையாக கொண்டு போஸ்டர்கள் அடித்து சென்னை முழுக்க ஒட்டப்பட்டுள்ளது.