காவல்துறை மானியத்தன்று சென்னையில் பொதுக்கூட்டம் - ஸ்டாலின்
சென்னை: காவல்துறை மானியக்கோரிக்கை நடைபெறும் நாளான ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அந்த கூட்டத்தில் சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் பேச உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளான இன்று போட்ட சட்டசபைக் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் கூறினார். அப்போது, காவல்துறை மானியத்தன்று இதே போன்று தர்ணா நடைபெறுமா என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், காவல்துறை மானியக் கோரிக்கையன்று நாங்கள் பொதுக்கூட்டம் நடத்துகிறோம். வேண்டுமென்றே, திட்டமிட்டு எங்களை காவல்துறை மானியத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, நாங்கள் மட்டுமல்ல இந்த நாடே இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிறது. திட்டமிட்டு இந்த காரியத்தை செய்திருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் இருந்தபோது, தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இதுபோல எத்தனையோ முறை, பல்வேறு நடவடிக்கைகள் எல்லாம் சபையில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
அப்போது சட்டசபையில் இருக்கக் கூடியவர்கள், வெளியில் இருக்கக் கூடிய தலைவர்கள் குரல் எழுப்புகின்றபோது, உடனடியாக தலைவர் கலைஞர் அவர்கள் அதை மறுபரிசீலனை செய்து, தண்டனையை குறைத்து மீண்டும் அழைத்து இருக்கக்கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்திருக்கின்றன.
அதுமட்டுமல்ல, ஒருமுறை துணை முதலமைச்சராக இருந்த நான், சில அமைச்சர்களை எல்லாம் அழைத்து, வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்களை, எதிர்க்கட்சி உறுப்பினர்களை எல்லாம் அழைத்து வர வேண்டும், அவர்களை சமாதானம் செய்திட வேண்டும், தவறுக்கு வருந்துகிறோம் என்று கூட சொல்லி அழைத்து இருக்கிறோம்.
இதெல்லாம் கடந்த கால திமுக வரலாறு. கலைஞருடைய வரலாறு. ஆனால், இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவிடம் அப்படி எதிர்ப்பார்ப்பது பெருத்த ஏமாற்றம் தான் என்றார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களை தவிர மற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்பார்களா ? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், நிச்சயமாக பங்கேற்பார்கள். எங்களை நீக்கியது தவறு என்று அங்கே தொடர்ந்து வலியுறுத்துவார்கள் என்று கூறினார்.
அப்போ அதுவரைக்கு போட்டி சட்டசபை கூட்டம்தானே போல...