விஜயகாந்த்துக்கு பிப்ரவரி 20ல் அக்னி பரிட்சை.. காஞ்சி மாநாட்டுக்கு பிறகு உடைகிறது தேமுதிக?
சென்னை: திமுக கூட்டணியில் இணைவதாக விஜயகாந்த் அறிவிக்காவிட்டால், தேமுதிகவில் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் திமுக பக்கம் தாவிச் செல்ல தயாராக உள்ளனர். அவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வைத்துள்ளது திமுக.
நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியை தவிர்த்து வேறு எந்த கூட்டணியும் இதுவரை உருவாகவில்லை.
அதிமுகவை பொறுத்தளவில் கூட்டணிக்காக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் திமுக கூட்டணியில் தேமுதிகவோ அல்லது மக்கள் நலக் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியிமோ சேர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. மக்கள் நலக் கூட்டணியே அதிமுகவின் பி டீம் தான், இதை உருவாக்கியதே உளவுத்துறையும் அதிமுகவும் தான் என்று பேச்சு பரவியுள்ளது.
திமுக தரப்பில், விஜயகாந்த்தை எப்படியாவது கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்ற முயற்சி தொடர்ந்து நடக்கிறது. அதே நேரம் மரியாதையை இழக்காமலும், விஜய்காந்தை மிகவும் வளர்த்துவிடாத வகையிலும், அவரது நிர்பந்தத்துக்கு முழுவதுமாக அடி பணிந்துவிடாமலும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக உள்ளது.
வாக்கு வங்கி
கடந்த மக்களவை தேர்தலில் தேமுதிக 6.33 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. இந்த வாக்கு வங்கி திமுகவுக்கு உதவும் என்பது கருணாநிதியின் கணக்காக உள்ளது.
கறார் கண்டிஷன்
அதேநேரம், வழக்கம்போல விஜயகாந்த் ரொம்பவே பிகு செய்துகொள்கிறாராம். திமுக கூட்டணிக்கு வந்தால், விஜயகாந்த் தரப்பை சேர்ந்த ஒருவருக்கு, துணை முதல்வர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்பதோடு, 70 தொகுதிகளாவது வேண்டும் என்று கறாராக கேட்டுள்ளது விஜயகாந்த் தரப்பு.
திமுக மறுப்பு
விஜயகாந்த் கட்சிக்கு சுமார் 40 இடங்கள் வரை வழங்க திமுக தயாராக இருப்பதாகவும், துணை முதல்வர் பதவியெல்லாம் வழங்க முடியாது என்று தெரிவித்துவிட்டதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடன் பேச்சு
தனது கோரிக்கையை திமுக ஏற்காததால் கோபமடைந்த விஜயகாந்த், பாஜக கூட்டணியோடு பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளாராம். ஆனால், இதற்கு தேமுதிக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பெருவாரியான தேமுதிக நிர்வாகிகளுக்கு அக்கட்சி திமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.
தொண்டர்கள் கடுப்பு
விஜயகாந்த்தை பொறுத்தளவில், வெற்றி வாய்ப்பைவிட தனது கோரிக்கையை நிறைவேற்றுவதில்தான் விடாப்பிடியாக இருக்கிறார் என்று பல தேமுதிக நிர்வாகிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்க நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்வம் காட்டவில்லை.
மாநாட்டுக்கு பிறகு
இந்நிலையில் காஞ்சிபுரத்தில், வரும் 20ம் தேதி, தேமுதிக மாநாடு நடைபெறுகிறது. அக்கூட்டத்தில், யாருடன் கூட்டணி என்ற முடிவை விஜயகாந்த் அறிவித்தாக வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்துள்ளது. திமுகவுடன் கூட்டணி என்றால் ஓ.கே. அல்லது, கட்சியை உடைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடைபடுகிறதா தேமுதிக
தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை திமுக பக்கம் இழுக்க திட்டமுள்ளதாக தெரிகிறது. திமுக உடைக்காவிட்டாலும், தேமுதிகவில் பல நிர்வாகிகள் தாங்களாகவே திமுக பக்கம் செல்லவும் வாய்ப்புள்ளதாம். சிலர் அதிமுக பக்கம் சாய்வார்களாம்.
அக்னி பரிட்சை
வரும் காஞ்சி கூட்டம் தேமுதிகவை பொறுத்தளவில் அக்னி பரிட்சை என்றால் அதுமிகையில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வைகோ கட்சியை போல தேமுதிக உடைக்கப்படுமா அல்லது, கட்சியை விஜயகாந்த் காப்பாற்றுவாரா என்பது காஞ்சி கூட்டத்திற்கு பிறகு தெரியவரும்.