காவிரி : திமுக சார்பில் நாளை நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நாளை நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : காவிரி விவகாரத்தில் நாளையும் விசாரணை நடக்க இருப்பதால், நாளை நடக்க இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை திமுக தள்ளி வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீட்டிற்கான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, மே 14ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், மத்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங், திட்ட வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து இருந்தார்.
இதுதொடர்பாக இன்று மீண்டும் விசாரணை வந்த வழக்கில், காவிரி அமைப்பின் தலைமையிடத்தை டெல்லியில் அமைக்க வேண்டும் என்பது, உள்ளிட்ட பல முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நாளையும் நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், நாளை காவிரி விவகாரம் தொடர்பாக நடக்க இருந்த திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள குறிப்பில், காவிரி விவகாரத்தில் நாளையும் விசாரணை நடக்கவுள்ளதால், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.