பெரியார் விருது தவிர்ப்பு... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும் விருதுகளில் பெரியார் விருது தவிர்க்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் விருது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்த விருதை வழங்க சொந்தக் கட்சியில் கூட ஆள் இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பெரியார் விருதை தவிர்த்ததற்கான காரணத்தை தமிழக மக்களுக்கு அதிமுக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
விருதுகள்
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் பெரியார் விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு அந்த விருது தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் கேள்வி
பெரியார் விருதை வழங்க சொந்தக் கட்சியில் கூட இல்லையா என்றும், அல்லது டெல்லி எஜமானர்களின் மனதை குளிர்விப்பதற்காக இந்த விருது தவிர்க்கப்பட்டதா எனவும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதற்கான காரணத்தை தமிழக மக்களுக்கு அதிமுக அரசு அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
வளர்மதி
கடந்த ஆண்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் அமைச்சர் ப.வளர்மதிக்கு பெரியார் விருது அளிக்கப்பட்டது. அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தாண்டு அந்த விருதை அடியோடு கைவிட்டுவிட்டது தமிழக அரசு.
எதிர்ப்பு
இதனிடையே பெரியார் விருது தவிர்க்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவது பற்றியும் பெரியாரிய சிந்தனையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். தமிழ் வளர்ச்சித்துறை அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.