ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு.. திமுக சார்பில் 5 மாவட்டங்களில் போராட்டம்
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
காவிரி டெல்டா பகுதியில் அமைக்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதியோ மக்கள் கருத்து கேட்பு கூட்டமோ நடத்த தேவையில்லை என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் மாணவர்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 28-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் கண்டன போராட்டம் நடைபெற இருப்பதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து நேற்று இரவு அனுமதி அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று தஞ்சை, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.