தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாவிட்டால் அண்ணாசாலையில் மறியல் போராட்டம்: ஜெ.அன்பழகன்
சென்னை: சேப்பாக்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாவிட்டால், அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அத்தொகுதி எம்.எல்.ஏ.வும், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மற்றும் குடி நீர் வழங்கல் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பெண்கள் சிலர் கைகளில் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜெ.அன்பழகன் பேசியதாவது:-
புறக்கணிப்பு...
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி வருடத்துக்கு ரூ2 கோடி ஒதுக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தொகுதி என்பதால் இந்த பகுதி புறக்கணிக்கப்படுகிறது. இந்த தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. 7 வார்டுகளிலும் குப்பைகள் அள்ளாததால் மலை போல் தேங்கி கிடக்கிறது.
திமுக தொகுதி என்பதால்...
திமுக சட்டமன்ற உறுப்பினர் என்பதால் மாநகராட்சி பணிகள் எதுவும் நடக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம் இந்த தொகுதியில் உள்ளது.
நோய்த் தொற்று...
இதன் பக்கத்து தெருக்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் மலேரியா, டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய வாரிய அதிகாரிகள் பணிகளை செய்ய ஆட்கள் இல்லை என்று கூறுகின்றனர்.
லாரிகளில் குடிநீர் வினியோகம்...
லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது அதிமுகவினருக்குத்தான் லாபம் ஒரு குடத்துக்கு ரூ.5 முதல் 10 வரை வசூல் செய்கின்றனர். அடிப்படை பணிகளை நிறைவேற்றக்கோரிதான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 4 ஆண்டாக வலியுறுத்தியும் தட்டிக்கழித்து வருகின்றனர்.
மறியல் போராட்டம்...
இதற்கு காரணம் இந்த பகுதி மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் என்பது தான். எனவே மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டும். இந்த தொகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுமானால் அண்ணா சாலையில் அண்ணா சிலை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்...
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுமான் கான், ஆயிரம் விளக்கு உசேன், நிர்வாகிகள் வெல்டிங்மணி, கென்னடி, ஆர்.என். துரை, எம்.டி.ஆர். நாதன், பகுதி செயலாளர் ஜெ.கருணாநிதி, ஏழுமலை, அகஸ்டின்பாபு, மாணவரணி மாநில துணை அமைப்பாளர் எஸ்.மோகன், சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் சிதம்பரம், பாண்டிபஜார் பாபா சுரேஷ், மதன்மோகன், வேலு, பரமசிவம், ராமலிங்கம், கணபதி, பொன்னன், கண்ணன், நொளம்பூர் ராஜன், மதி, அன்புத்துரை, மாரி, பிரபாகரன், மேட்டுக்குப்பம் கமலக்கண்ணன், முத்துராமன், ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.