ஜல்லிக்கட்டுக்காக தீவிரமடையும் போராட்டம்... திருச்சியில் கே.என்.நேரு தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர்.
திருச்சி: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள தமிழர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் திமுகவினர் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.
திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி அண்ணாசிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தால் திருச்சி அண்ணாசிலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.