மக்கள் பிரச்சினைகளை அலசும் திமுக தேர்தல் அறிக்கை!: மார்ச் மாதம் ரிலீஸ்!!
சென்னை: தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக பொது மக்கள், விவசாயிகள் வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகளிடம் திமுகவினர் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தான் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடிநீர், மின்சாரம், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் குறித்து அதிக கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் தேர்தல் அறிக்கையில் இந்த பிரச்சினைகள் முக்கிய இடம் பெறும் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தல்
2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் திராவிட முன்னேற்றக்கழகம் முதற்கட்டமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் தொடங்க உள்ள நிலையில், தேர்தல் அறிக்கைக்காக பரபரப்பாக இயங்கி வருகிறது தேர்தல் அறிக்கை பணிக்குழு.
டி.ஆர்.பாலு தலைமை
தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அதில் துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கனிமொழி எம்.பி. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு, சண்முக சுந்தரம், என்.ஆர். இளங்கோ, பேராசிரியர் ராமசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.
அடிப்படை பிரச்சினைகள்
இந்த குழு அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தக பிரமுகர்களை சந்தித்து மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து கேட்டு மனுக்களை பெறுகின்றனர். அந்தந்த தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளுடன் இந்த சந்திப்பு நடக்கிறது.
கருத்து கேட்பு
நெல்லை, விருதுநகர் மற்றும் மதுரை மண்டலங்களை உள்ளடக்கிய 9 மாவட்டங்களில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கருத்துக்களை பெற்று வருகிறது. பொது மக்கள், விவசாயிகள் வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கேட்டு வருவதாக திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்
குடிநீர், மின்சாரம், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் குறித்து அதிக கோரிக்கைகள் வந்துள்ளன. பல்வேறு தொழில்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஏராளமான கருத்துக்கள் வந்துள்ளன. இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
மக்கள் பிரச்சினைகள்
உள்ளூர் பிரச்சனை அடிப்படையிலும், பொதுவான பிரச்சனையின் அடிப்படையிலும் இதனை ஆய்வு செய்து அதனை தீர்க்க எப்படி முடியும். அதற்கு என்னனென்ன சாத்திய கூறுகள் உள்ளன என்ற வழிமுறைகளை ஆராய்ந்த பின் தான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.
மக்கள் நலத்திட்டங்கள்
முக்கியமான இலவச திட்டங்களை தவிர்க்க இயலாது. ஆனால் இலவச டி.வி, போன்றவற்றிக்கு பதிலாக மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். சாதாரண மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
234 தொகுதிகளிலும்
வரிவிதிப்பில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் தற்போதுள்ள முறையில் நிறைய பாதிப்புகள் இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். தி.மு.க. தேர்தல் அறிக்கை பொது பிரச்சனையை மையமாக வைத்து மட்டுமின்றி தயாரிக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய பிரச்சனைகளை தீர்க்க கூடிய வகையில் தயாரிக்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாகவும் தேர்தல் அறிக்கை இடம் பெறும்.
அறிக்கை வெளியிடுவது எப்போது?
இன்னும் ஒரு மாதம் வரையில் பொது மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்படும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தான் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார் டி.கே.எஸ் இளங்கோவன்.