ராமஜெயம் 4வது நினைவுநாள்... கே.என்.நேரு கண்ணீர்.. கொலையாளிகளின் நிழலைக் கூட நெருங்காத போலீஸ்!
திருச்சி: படுகொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று திருச்சியில் அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பிராட்டியூரில் உள்ள கேர் கல்லூரியில் உள்ள ராமஜெயம் உருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அவரது அண்ணனுமான கே.என்.நேரு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி அதிகாலையில் வாக்கிங் சென்ற ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். சில மணி நேரங்களில் திருச்சி திருவளர்ச்சோலை அருகே அவரது உடல் புதரில் கண்டெடுக்கப்பட்டது.
கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார் ராமஜெயம். இந்த கொலை வழக்கு முதலில் மாநகர போலீசார் விசாரித்தனர். அடுத்து சிபிசிஐடி.க்கு மாற்றப்பட்டது.
சிபிஐ விசாரணை
குற்றவாளியின் நிழலைக்கூட சிபிசிஐடி போலீசாரினால் நெருங்க முடியவில்லை. 3 ஆண்டுகளாக கொலை வழக்கில் எந்த முன்னேற்றம் இல்லாத நிலையில், ராமஜெயத்தின் மனைவி லதா சிபிஐ விசாரணை கோரி கொலையான, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவகாசம் கேட்ட சிபிசிஐடி
சிபிசிஐடி போலீசார் இதுவரை நீதிமன்றத்தில் 6 முறைகளுக்கு மேல் அவகாசம் கேட்டு விசாரணை நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.
ராமஜெயம் கொலை வழக்கு மிகப்பெரிய மர்ம வழக்காகவே தமிழக போலீஸாரைப் பொறுத்தவைரையில் இருக்கிறது. கடைசியாக வருகின்ற ஜூன் 1ந் தேதி இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவு தினம்
இன்று ராமஜெயத்தின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அவரது சகோதரர் கே.என்.நேரு, தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான கேர் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள, ராமஜெயம் உருவசிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
போஸ்டரில் சிரிக்கும் ராமஜெயம்
நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி முழுக்க இதய ஓவியமே, வாரி வழங்கிய வள்ளலே, அழியா வரலாறே, காவல் தெய்வமே, ஏழைகளின் சிரிப்பே, தி ஸ்டால்வார்ட், என ராமஜெயம் நினைவாக, அவரது ஆதரவாளர்கள். ஏராளமான போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
துக்கம் அனுசரிப்பு
ராமஜெயத்தின் ஆதரவாளர்கள், திருச்சியில் ஆங்காங்கே அன்னதானம் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கியும் அமைதியான முறையில் துக்கம் அனுசரித்துவருகின்றனர்.
இன்னமும் எம்.டிதான்
ராமஜெயத்தை எம்.டி என்றுதான் இன்னமும் அழைக்கின்றனர். எம்டியின் மரணத்திற்கான காரணத்தை இந்த அரசு கண்டுபிடிக்காமல் இருக்கிறது. சிபிஐக்கு மாற்றி கொடுக்க கோரிக்கை வைத்தால், மாற்றிக்கொடுத்து வழக்கை முடிக்க வேண்டியதுதானே.
குற்றவாளிகள் பிடிபடுவார்கள்
இந்த வழக்கு முடியக்கூடாது என்பதில் இந்த அரசு ஏன் இவ்வளவு அக்கறையுடன் செயல்படுகிறது. இந்த அரசு இருக்கும்வரை அண்ணன் சாவுக்கு நீதிகிடைக்காது. ஆட்சி மாற்றம்வரும், கொலைக்கான காரணம், குற்றவாளிகள் நிச்சயம் பிடிபடுவார்கள் என்கின்றனர் ராமஜெயம் ஆதரவாளர்கள்.
தன்னைக் கொன்றவர்கள் யார் என்று ராமஜெயமே ஆவியாக வந்து சொன்னால்தான் உண்டு.