ஆவின் பால் விலை உயர்வு.. நாளை திமுகவின் 'ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு'!
சென்னை: ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் நாளை தமிழகத்தில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
பால் விலையை திரும்பப் பெறக் கோரி இந்தப் போராட்டத்தை நடத்துகிறது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்தப் போராட்டத்தை திமுக நடத்துகிறது.
சென்னை சேப்பாக்கம் - எழிலகம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வடசென்னை ஆர்.டி.சேகர் தலைமை தாங்குகிறார்.
திருவள்ளூர் அண்ணா திடல் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்குகிறார்.
காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்குகிறார்.
இதேபோல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.