ஏரியாவுக்கு ஏற்றார் போல "கல்லை" வீசுங்க.. வன்னியர், தலித் வாக்குகளை அள்ள திமுகவின் பலே பிளான்!
சென்னை: வட தமிழகத்தில் வன்னியர் மற்றும் தலித் வாக்குகளை அள்ளி திமுக மிகவும் நுட்பமாக திட்டமிட்டு செயலாற்றி வருகிறதாம். திமுகவின் இந்த புதிய அணுகுமுறையால் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் செம டென்ஷனாகியுள்ளனராம்.
திமுகவின் திட்டங்களில் ஒன்று அதிருப்தியில் உள்ள பாமகவினரை வளைத்து அவர்களைத் திமுகவுக்குக் கொண்டு வராமலேயே அவர்கள் மூலமாக வன்னியர் வாக்குகளைப் பிரித்து பாமகவுக்குப் போக விடாமல் செய்வது என்று சொல்கிறார்கள். இந்தத் திட்டம் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாகவும் திமுக தரப்பு உற்சாகமாக கூறுகிறது.
அதேபோல பாமகவினர் வலுவாக உள்ள பகுதிகளில் தலித் வாக்குகளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் திமுக பக்கம் கொண்டு சேர்க்கும் வேலையிலும் திமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனராம்.
2011ல் கூட்டணி
2011 சட்டசபைத் தேர்தலில் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும், திமுக கூட்டணியில் இணைந்திருந்தனர். ஆனால் அவர்களின் வாக்கு வங்கி திமுகவுக்கு கை கொடுக்கவில்லை. மாறாக படுதோல்வியையே கொடுத்தது.
கட்சிகள் சேர்ந்தாலும் வாக்குகள் வராது
வட மாவட்டங்களைப் பொறுத்தவரை பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் கூட்டணி அமைத்தாலும் கூட வன்னியர்கள், தலித்துகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தலித் வாக்குகள் வன்னியர்களுக்குக் கிடைக்காது. இதுதான் எதார்த்தம்.
இப்போது அப்படி இல்லை
ஆனால் இப்போது இருவருமே கூட்டணியில் இல்லை. ஆனாலும் இரு தரப்பு வாக்கு வங்கியிலும் ஓட்டையைப் போட்டு வாக்குகளை அள்ளி விட செமத்தியான திட்டத்தைப் போட்டு செயலாற்றி வருகிறதாம் திமுக.
ரகசிய ஒப்பந்தம்
இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அதிருப்தி பாமகவினரையும், விடுதலைச் சிறுத்தைகளையும் நைச்சியமாக வளைத்து வைத்துள்ளனராம். இதன் மூலம் பாமகவுக்கும், மக்கள்நலக் கூட்டணிக்கும் போகும் வாக்குகளில் கணிசமானதை தன் பக்கம் திருப்ப முடியும் என திமுக நம்புகிறதாம்.
நாம் தமிழர்
மேலும் வட மாவட்டங்களில் சிலவற்றில் நாம் தமிழர் கட்சி தலித் மற்றும் வன்னியர் வாக்குகளில் சற்று பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் திமுக தரப்பு கூறுகிறது. இது தங்களுக்கு லாபத்தையே தரும் என்பதும் திமுகவின் நம்பிக்கை.
புத்திசாலித்தமான பிரச்சாரம்
வட மாவட்டங்களில் திமுகவினர் ஏரியாவுக்கு ஏற்றார் போல பிரச்சாரம் செய்கிறார்களாம். பாமக வலுவாக உள்ள பகுதி என்றால் அங்குள்ள தலித் வாக்குகளை முழுமையாகக் கவரும் வகையில் மரக்காணம் சம்பவம், சேஷசமுத்திரம் மோதல் உள்ளிட்டவற்றை விரிவாகவும், உருக்கமாகவும் தலித் மக்களிடையே எடுத்துரைத்து திமுக ஆட்சியில் உங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்வோம் என்று டச்சிங்காக பிரச்சாரம் செய்கிறார்களாம்.
தலித் பகுதிகளில் வேற மாதிரி
அதுவே தலித் மக்கள் அதிகம் உள்ள பகுதியாக இருந்தால், திருமாவளவனை தோற்கடிக்க பாமகவை விட திமுகவே சிறந்த வழி. சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாமக என்ன செய்தது என்று பேசி வன்னியர் வாக்குகளை திமுக வசீகரிக்கிறதாம்.
பிரித்தாளும் சூழ்ச்சி
வட மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் அனைத்து தலித்துகளும் விடுதலைச் சிறுத்தைகளும் விடுதலைச் சிறுத்தைக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்று கூற முடியாது. அதே போலத்தான் வன்னியர் வாக்குகளும். இதைத்தான் திமுக சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. இரு வாக்கு வங்கிகளையும் திசை திருப்பி அதிலிருந்து கணிசமான பங்கை தான் அள்ளி விடுவது என்பதே திமுகவின் திட்டம்.
வேட்பாளர் தேர்வில் புத்திசாலித்தனம்
பாமக வட மாவட்டங்களில் முழுக்க முழுக்க வன்னியர்களையே வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆனால் திமுக அப்படிச் செய்யவில்லை. தேவைப்பட்ட இடங்களில் மட்டுமே வன்னியர்களைக் களத்தில் இறக்கியுள்ளது. மற்ற இடங்களில் முதலியார்களை, நாயுடுகளை, இதர ஜாதியினரை களம் இறக்கியுள்ளது. இதனால் பலமுனை வாக்குகள் திமுகவுக்குக் கிடைக்கும்.
வெற்றிக் கனியைப் பறிக்க
மொத்தத்தில் கட்சி மூலமாக ஒரு பங்கு வாக்கு, வேட்பாளர் மூலமாக ஒரு பங்கு வாக்கு என பெறுவதோடு, ஜாதி அடிப்படையில் ஒரு பங்கு வாக்கு என கணிசமான வாக்குகளை தன் பக்கம் திருப்பி வெற்றிக் கனியை பறிப்பதே திமுகவின் திட்டமாகும். இது இந்த முறை பலன் தரும் என்பதும் திமுகவின் நம்பிக்கை.