2 ஜி வழக்கில் இருந்து விடுதலை... லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் கனிமொழி
2ஜி வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ள கனிமொழி, அ.ராசா இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்புகின்றனர். விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றும் மக்களுக்கு சேவை செய்வதே தனது விருப்பம் என்றும் கனிமொழி கூறியுள்ளார். 7 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளது கனிமொழியை அதிக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கனிமொழி, அ.ராசா இன்று சென்னை திரும்புகின்றனர். டெல்லியில் இருந்து சென்னை திரும்பும் அனைவருக்கும் பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்து அதிரடி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு ஒட்டுமொத்த திமுகவை உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளது.
நாடே எதிர்பார்த்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு 21ஆம் தேதி வெளியானது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2 ஜி வழக்கில் விடுதலை
நிரபராதியாக விடுதலை பெற்ற தீர்ப்புடன் சென்னை திரும்பும் கனிமொழி, அ.ராசாவிற்கு சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வழிநெடுகிலும் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளிதழ்களிலும் விளம்பரங்கள் களைகட்டியுள்ளன.
சென்னையில் வரவேற்பு
சென்னை திரும்பும் கனிமொழி ராசாவிற்கு விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல கனிமொழியின் வீட்டிலும் மலர்கள், தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர்களிடம் ஆசி
கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெறும் கனிமொழி, கீழ்பாக்கத்தில் பொதுசெயலாளர் அன்பழகன் வீட்டிற்கும் சென்று ஆசி பெறுகிறார். 2ஜி வழக்கில் கனிமொழி, அ.ராசா, தயாளு அம்மாள் விடுதலை பெற்றதை கொண்டாடி வருகின்றனர் திமுகவினர். திகார் சிறையில் இருந்து கனிமொழி ஜாமீனில் வந்த போது கொண்டாடிய திமுகவினர் இப்போது மிகவும் உற்சாகமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
மக்களுக்கு சேவை செய்வேன்
7 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளது கனிமொழியை அதிக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கனிமொழி கூறியுள்ளார்.
துணை பொதுசெயலாளர் பதவி
சென்னை திரும்பும் கனிமொழிக்கு பரிசாக திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்குவது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த திமுக துணைப் பொதுச்செயலர் சற்குணபாண்டியனின் இடத்துக்கு இதுவரை யாரும் நிரப்பப்படவில்லை. ஆகையால் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலர் பதவி வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது. சென்னை திரும்பும் கனிமொழிக்கு அண்ணன் ஸ்டாலின் பரிசளிப்பார் என்றே கூறப்படுகிறது.