ராதாபுரம்: வெறும் 49 வாக்கு வித்தியாசத்தில் திமுக அப்பாவு தோல்வி- லக்கானியிடம் புகார்
நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி போராட்டம் நடத்திய அப்பாவு, திமுக வாக்குகள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டதாக புகார் கூறினார்.
232 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பல தொகுதிகளில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக ராதாபுரத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இதில் அதிமுக வேட்பாளரின் 25 வாக்குகள் அப்பாவுவுக்கு கிடைத்திருந்தால் அவரது மொத்த வாக்குகள்69,566 ஆகியிருக்கும். இன்பதுரையின் வாக்குகள் 69,565 ஆகியிருக்கும். அதன்படி ஒரு வாக்கு வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றிருப்பார். இந்தக் கணக்கைச் சொல்லிச் சொல்லி ராதாபுரம் தொகுதி திமுக தொண்டர்கள் வருத்தம் கொண்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த வாக்குகளையும் எண்ண வேண்டும் என வலியுறுத்தி திமுகவின் அப்பாவு அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவே, அப்பாவுவை துணை ராணுவப்படையினர் குண்டு கட்டாக அங்கிருந்து வெளியேற்றினர். இதனையடுத்து, வெளியேறிய திமுக அப்பாவு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.
மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி போராட்டம் நடத்திய அப்பாவு, திமுக வாக்குகள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டதாக புகார் கூறினார். தான் வெற்றி பெற்று விட்டதாகவும், தன்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததாகவும் அப்பாவு தெரிவித்தார். அப்பாவுவின் புகார் குறித்து தேர்தல் ஆணையர் லக்கானியிடம் ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
இந்த தொகுதியில் போட்டியிட்ட எஸ்.பி. உதயகுமார் 4891 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.