ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: வீட்டில் கருப்பு கொடி ஏற்றி கருப்பு சட்டை போட்ட கருணாநிதி!
சென்னை: ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை மூலம் கருப்பு தினம் கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார்.
ராஜபச்சேவுக்கு அழைப்பு
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினரை, இலங்கைக்குள் அனுமதிக்க முடியாதென்று அறிவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை செப்டம்பர் 25ல் தொடங்கும் ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
பேச விடக்கூடாது
ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினரை அனுமதிக்க மறுத்த ராஜபக்சேவையோ, அந்த நாட்டின் வேறு எந்தப் பிரதிநிதியையோ ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என்று கடந்த மாதம் 26ம் தேதி நடந்த டெசோ அமைப்பின் அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
முக்கியமான இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இனப்படுகொலை
தீர்மானத்தில் நாம் வலியுறுத்தியிருந்தபடி ராஜபக்சேவை ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று நம் மத்திய அரசும் இதுவரை வலியுறுத்தவில்லை. ஐ.நா. பொதுமன்றமும் ராஜபக்சேவுக்கு அனுப்பிய அழைப்பினைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை.
ஒட்டுமொத்த எதிர்ப்பு
இந்த நிலையில், தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்டதுடன், வரலாறு காணாத அளவுக்கு மனித உரிமை மீறல்களையும் அரங்கேற்றிய அதிபர் ராஜபக்சே, செப்டம்பர் 25ம் தேதி ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொள்வதைக் கண்டித்து உலகத் தமிழர்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
கருப்புதினம் அனுஷ்டிப்பு
இதற்காக, ஈழத் தமிழர் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் வரும் 25ம் தேதி தத்தம் இல்லங்களில் கருப்பு கொடி ஏற்றி வைப்பதோடு கருப்பு சட்டை அணிதல், கருப்பு சின்னம் அணிதல் ஆகியவற்றின் மூலம் ராஜபக்சேவுக்கு தமிழகத்தின் கடும் கண்டனத்தை எதிரொலித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கருப்புச்சட்டை, கருப்புக்கொடி
இதனையடுத்து இன்றைய தினம் திமுக தலைவரின் கோபாலபுரம் வீடு தொடங்கி அனைத்து திமுகவினர் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலின் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
கறுப்பு தின எழுச்சி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், "டெசோ" சார்பிலும் அறிவிக்கப்பட்டு, இன்று நடத்தப்படுகின்ற இந்த கறுப்பு நாளை தமிழகத்திலே மாத்திரமல்ல; உணர்ச்சியுள்ள தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் - எங்கள் அறிவிப்புக்கு இணங்க கறுப்பு தினமாக கடைப்பிடிக்கிறார்கள் என்றார்.
தமிழர்கள் மறக்கமாட்டார்கள்
நாங்கள் எங்கள் வேண்டுகோளை இப்போது உள்ள மத்திய அரசு மாத்திரமல்ல; ஏற்கனவே நடைபெற்ற மத்திய அரசும் உணருகின்ற வகையில், எங்களுடைய எதிர்ப்பையும் மறுப்பையும் தெரிவித்திருக்கிறோம். அதை இன்று உள்ள மத்திய, மாநில அரசுகள் செவி மடுக்க மறுத்தாலும் கூட, இந்தக் கறுப்பு தினம் உருவாக்கியுள்ள உணர்வையும், எழுச்சியையும் தமிழர்கள் உள்ள வரையில் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் முகப்பு கருப்பு
கருணாநிதியின் முகநூல் முகப்புப் பக்கமும், கருப்பாக கட்சியளிக்கிறது. அந்த அளவிற்கு திமுகவினர் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்ட அதிமுக அரசுக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி அனுஷ்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.