மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது முரசொலி நாளிதழின் இணையதளம்
திமுகவின் முரசொலி நாளிதழின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.
சென்னை: திமுகவின் முரசொலி நாளிதழின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியதை அடுத்து தற்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. சமீபத்தில்தான் பவள விழாவை கொண்டாடியது. முரசொலியையும் கருணாநிதியையும் பிரிக்க முடியாது என்ற அளவுக்கு அவரது கைவண்ணங்கள் முரசொலியில் வந்தன.
சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நாளிதழுக்கு அதிகம் வாசகர்கள் உண்டு. இந்த புத்தாண்டு தினத்திலிருந்து முரசொலி நாளிதழின் விலை ரூ.3 -லிருந்து ரூ5-க்கு விற்கப்படும் என தகவல் இருந்தது.
இந்நிலையில் முரசொலி நாளிதழின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. அதன் முகப்பு பக்கத்தில் ஹேக்கர் பக்கத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர். மேலும் இணையதள பாதுகாப்பு குறித்து இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஹேக்கர் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் முரசொலி நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். முரசொலியின் தொழில்நுட்ப பிரிவினர் இணையதளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அந்த இணையதளம் தற்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
புத்தாண்டு அன்று முரசொலி இணையதளம் முடக்கப்பட்டதால் திமுகவினர் கலக்கத்தில் இருந்து, தற்போது இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.