காவிரி: திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத் தயார் - ஸ்டாலின்
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத் தயார் என்று அக்கட்சித் தலைவரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத் தயார் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அந்த தீர்ப்பின்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் தமிழகத்திற்கு 177.2 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை ஒரு திட்ட அமைப்பு தான் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
கருப்பு சட்டையில் திமுக
இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
திமுக ஆதரவு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். இதற்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்தனர்.
ஜனநாயகத்திற்கு நெருக்கடி
சட்டசபையில் பேசிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அனைத்துக்கட்சியினரை பிரதமர் மோடி சந்திக்க மறுத்தது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி என்று கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தருகிறது.
ராஜினாமாவிற்கு நாங்க ரெடி
ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய நேரம் இதுவல்ல. அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். அதற்காக திமுக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்யவும் தயார் என்றும் கூறினார் ஸ்டாலின்.
மத்திய அரசுக்கு அழுத்தம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வரை சந்தித்து பேசிய மு. க. ஸ்டாலின், காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். அதனை ஏற்க அதிமுக எம்எல்ஏக்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யத் தயார் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.