காவிரி வழக்கில் தமிழக வக்கீல் சரியாக வாதாடவில்லை... துரைமுருகன் மீண்டும் குற்றச்சாட்டு!
காவிரி நீர் விவகாரத்தில் திமுக என்னென்ன செய்திருக்கிறது என்பதை முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவருமான துரைமுருகன் பட்டியலிட்டார்.
வேலூர் : காவிரி நீர் வழக்கை உச்சநீதிமன்றத்தில் தமிழக தரப்பு வழக்கறிஞர்கள் சரியாக வாதிடவில்லை என்று முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவருமான துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரியில் தமிழகத்திற்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட திமுக மட்டுமே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் கூறியதாவது : காவிரியில் 70 டிஎம்சி நிலத்தடி நீர் இருப்பதாக கர்நாடகா சொன்னது காவிரி நடுவர் மன்றத்திலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் காவிரி நடுவர் மன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை, சுப்ரீம் கோர்ட்டிலும் கர்நாடகா தரப்பு 4 வக்கீல்களும் இதையே தான் சொன்னார்கள்.
தமிழகம் சார்பில் 2 வழக்கறிஞர்கள் வாதாடினார்களே அவர்கள் கர்நாடகா இந்த வாதத்தை முன் வைத்த போது தமிழகத்தில் மட்டும் தான் நிலத்தடி நீர் இருக்கிறதா, கர்நாடகாவில் நிலத்தடி நீர் இல்லையா என்பதை கேட்டார்களா. நிலத்தடி நீர் மட்டம் எப்போது உயரும் தண்ணீர் தேங்கினால் மட்டுமே அதிகரிக்கும்.
தமிழகத்திற்கு மேட்டூர் அணை மட்டுமே உள்ளது, ஆனால் கர்நாடகாவிற்கு கிருஷ்ணராயசாகர் அணை, ஹேரங்கி நீர் தேக்கம், பத்ரா அணை, துங்கத்ரா அணை என பல அணைகள் இருக்கின்றன. அங்கு நிலத்தடி நீர் அதிகரித்திருக்குமே அதையும் கணக்கில் எடுங்கள் என்று தமிழக வக்கீல் கேட்டிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் யாருமே வாய் திறக்கவே இல்லை.
கர்நாடகா தொடக்கம் முதலே ஒரே வழக்கறிஞர் பாலி நாரிமனை வைத்து வழக்கை நடத்தி வருகிறது. ஆனால் தமிழகமோ தடவைக்கு ஒரு வழக்கறிஞரை மாற்றுகிறது, ஜெயலலிதாவின் கிரிமினல் வழக்கில் ஆஜரான வக்கீல்கள் எல்லாம் காவிரி வழக்கு விசாரணைக்கு ஆஜரானார்கள்.
வழக்கு விசாரணைக்கு வரும் போது அந்தத் துறையின் அமைச்சர் என்ற முறையில் நான் சென்று என்னென்ன விஷயங்கள் வாதிடப்பட வேண்டும் என்று வக்கீல்களுடன் கலந்த ஆலோசித்திருக்கிறேன். பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை காவிரி வழக்கு தொடர்பாக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
பிரதமர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க மறத்த போது என்ன செய்திருக்க வேண்டும். முதல்வரும், துணை முதல்வரும் டெல்லி சென்று ஏன் அனைத்துக் கட்சியினரை பார்க்க மறுக்கிறீர்கள், இது தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னை என்பதை எடுத்து சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை, இவர்களுக்கு பதவி முக்கியம், வருமானம் முக்கியம்.
காவிரிக்காக திமுக என்ன செய்தது என்று கேட்கிறார்கள் காவிரி விவகாரத்திற்காக அனைத்தையும் செய்தது திமுக தான். கர்நாடகா அணை கட்டப் போவதை முதன்முதலில் சொன்னவர் கருணாநிதி, கர்நாடக மாநிலத்துடன் 35 முறை அவர்பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார், நானும் சில பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கிறேன். காவிரி வழக்கில் நடுவர் மன்ற தீர்ப்பை பெற்றோம், ஆனால் அதிமுக ஒன்றே ஒன்று செய்திருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டார்கள். ஆனால் என்ன பிரயோஜனம் தண்ணீர் வரவில்லையே என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.