விஜயகாந்த் கூட்டணி டீல்... குழப்பத்தில் தொண்டர்கள்... சரியும் தேமுதிக மவுசு
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேமுதிகவை எதிர்பார்த்து திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் காத்துக்கொண்டுள்ளன. யாருடன் கூட்டணி என்று விஜயகாந்த் இன்னமும் முடிவை அறிவிக்காத காரணத்தால் தேமுதிக தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மக்களுடன் கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என்று கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
5 சதவிகித வாக்குகள் இருந்தாலும் இவை ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்பதால் விஜயகாந்தை கூட்டணிக்கு இழுக்க திமுக கடுமையான முயற்சி செய்து வருகிறது. ஆனால் விஜயகாந்த் கிங் மேக்கராக இருப்பதைவிட ‘கிங்'காக இருக்கவே விரும்புவதாக கூறி வருகிறார். ஆனாலும் பல கட்சிகளுடன் தனித்தனியாக கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்துவதாக கூறப்படுவதால் தொண்டர்களிடையே ஒருவித குழப்பம் நிலவுகிறது.
முதல்வர் கனவு
கடந்த 2006 சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டு 8.38 சதவீத வாக்குகளை பெற்றது. இதனால், 2009 லோக்சபா கட்சிகள் விஜயகாந்தை வட்ட மடித்தன. அப்போது தேமுதிகவுக்கு 8 தொகுதிகள் தர சம்மதித் தது திமுக. இந்தக் கூட்டணியில் சேர்ந்தால் 8 எம்பி-க்கள், 2 அமைச்சர்கள் நிச்சயம் என சில நிர்வாகிகள் சொன்னபோது, யாரோ ரெண்டு பேரை அமைச்சராக்குவதற்காக எனது முதல்வர் கனவை முடக்கணுமா? என்று கோபப்பட்ட விஜயகாந்த் தனித்து களமிறங்கினார்.
10.33 சதவிகித வாக்குகள்
40 தொகுதிகளிலும் சுமார் 33 லட்சம் (10.33 சதவீதம்) வாக்குகளை பெற்றது தேமுதிக. 9 வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றனர். அந்த 40 பேரில் 33 பேர் இப்போது தேமுதிகவில் இல்லை. ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றவர்களில் சுதீஷ் உள்ளிட்ட இருவரைத் தவிர மற்றவர்களும் மாற்றுக் கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
அதிமுக உடன் கூட்டணி
2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து 29 தொகுதிகளை வென்றாலும் தேமுதிக வாக்கு வங்கி 7.88 சதவீதமாக சரிந்தது. விஜயகாந்தின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் அதிமுக பக்கம் சாய்ந்ததால் கட்சி இன்னும் கலகலத்துப் போனது.
சரிந்த வாக்கு வங்கி
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவால் ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை என்பதோடு வாக்கு வங்கியும் 5.14 சதவீதமாக சரிந்தது. இப்படி தொடர் சரிவுகளை சந்தித்தாலும் இப்போது சட்டசபைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் விஜயகாந்த் முடிவுக்காக காத்திருக்கின்றன.
தேமுதிக அறிக்கை
தேமுதிகவிற்கு இருக்கும் வரவேற்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் விஜயகாந்த் கூட்டணி பேரத்தை இழுக்கிறார். அனைத்துக் கட்சிகளும் அவரோடு கூட்டணி பேச்சுக்கள் தொடர்வதாக சொல்கின்றன. ஆனால், யாருடனும் இன்னும் கூட்டணி பற்றி பேசவில்லை என தேமுதிக அறிக்கை வெளியிடுகிறது.
தொண்டர்கள் குழப்பம்
இதையெல்லாம் பார்த்துவிட்டு தேமுதிக தொண்டர்களே குழப்பமடைந்துள்ளனர். எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து நாம் கரையேறப் போகிறோம் என்று கவலைப்பட்டு வருகின்றனர் தொண்டர்கள். திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் மனநிலைக்கு மாறாக வேறு ஏதாவது கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிக சிதறும் வாய்ப்பு உள்ள என அக் கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
வதந்தியா? உண்மையா?
திமுக உடன் கூட்டணி முடிவாகி விட்டது என்று ஒருபக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது வதந்தி என்கிறது தேமுதிக தரப்பு.திமுக தரப்பிடம் சுதீஷும் பாஜக தரப்பிடம் பிரேமலதாவும் பேசிக் கொண்டிருப்பதாகவும் இந்த இருவரில் ஒருவரை மத்திய அமைச்சராக்க பாஜக சம்மதித்து விட்டதாகவும் தகவல் பரப்பப்படுகிறது. இது, தங்களுக்கான முக்கியத்துவத்தை கூட்டிக் கொள்ள உதவும் என கணக்குப் போடுகிறது தேமுதிக தலைமை.
பணம் டெபாசிட்
நேர்காணலின் போது சீட் கேட்டவர்களிடம் எவ்வளவு செய்ய முடியும் என்று கேட்டதற்கு 1 கோடி, 50 லட்சம் என்று கூறியவர்களிடம், பணத்தை டெபாசிட் செய்யுங்கள் என்று விஜயகாந்த் கூறவே, நல்ல கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலானவர்கள் பணத்தை தேமுதிக அலுவலகத்தில் கட்டி வருகின்றனராம்.
வேட்பாளர் பட்டியல் ரெடி
கூட்டணி பற்றி முடிவாகும் முன்பே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை தயார் செய்யத் தொடங்கிவிட்டார் விஜயகாந்த். தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காதவர்களுக்கு 3 மாதங்களில் பணத்தை திருப்பி தரவும் ஒத்துக்கொண்டுள்ளாராம் விஜயகாந்த்.
எத்தனை தொகுதிகள்
பாஜக உடன் கூட்டணி, தேமுதிக 104 தொகுதிகளில் போட்டி என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்போ மக்கள் நலக்கூட்டணியுடன் பேச்சுவார்த்தை 113 தொகுதிகளில் தேமுதிக போட்டி என்கிறது. விஜயகாந்தின் இந்த நடவடிக்கைகள் கட்சியின் அடித்தளத்தை அரித்துக் கொண்டிருக்கின்றன.
மார்ச் 10ல் முடிவு?
தேமுதிகவின் மகளிரணி மாநாடு மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதில் யாருடன் கூட்டணி என்பதை மகளிரணி தலைவி பிரேமலதா உறுதியாக தெரிவிப்பார் என்கின்றனர். ஆனால் அதுவும் வரும்... ஆனா வராது என்கிற ரேஞ்சில்தான் இருக்கும் என்கின்றனர்.
தொண்டர்களின் நிலை
அதே நேரத்தில் தாங்கள் விரும்பும் கூட்டணியை விஜயகாந்த் அமைக்காவிட்டால் பதவிகளைத் துறந்து மாற்றுக் கட்சிகளில் தஞ்சமடைய ஏராளமான தேமுதிகவினர் காத்துள்ளனர். இவர்களை இழுக்க அதிமுகவும் தயாராகவே உள்ளது. விஜயகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அரசியல் வானில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.