தலைக்கு மேல் தொங்கிய கத்தி.. போயே போச்சு.. தப்பியது ஓபிஎஸ், 11 எம்.எல்.ஏக்கள் பதவி.. திமுக ஷாக்!!
சென்னை: ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் தனபாலே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் பதவிக்கு ஆபத்து இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2017-ல் இதே கால கட்டத்தில் தமிழக அரசியலில் பெரும் புயல் கிளம்பியது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ. பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்தினார்.
இதனையடுத்து சசிகலா முதல்வராக முயற்சித்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
2017 பிப்ரவரி 18-ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிருப்தி அணியாக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனால் அதிமுக கொறடா உத்தரவை மீறிய ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியது திமுக. சில மாதங்களிலேயே ஓபிஎஸ் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஐக்கியமானர். இதனால் தகுதி நீக்கம் செய்யக் கோரிய திமுக மனு கிடப்பில் போடப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என கூறியது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
இம்மனு விசாரணைக்கு வந்தால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகும்; அதிமுக ஆட்சி கவிழும் என கணக்குப் போட்டு காத்திருந்தது திமுக. அக்கட்சி எதிர்பார்த்தபடியே இவ்வழக்கு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகரின் நடவடிக்கைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இதனால் திமுக முகாம் மேலும் குஷியானது. இந்நிலையில் இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அப்போது உச்சநீதிமன்றத்தில் அவருக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் சபாநாயகரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி வழகை முடித்து வைத்தது.
இது திமுக தரப்பை பெரும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்தும் உள்ளாக்கியுள்ளது. தங்களது தலைக்கு மேலே தொங்கிய கத்தியாக இருந்த இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதால் தங்களது பதவிக்கு பிரச்சனை இருக்காது என நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள்.